லக்னோவில் அதிக அளவு போதை கொண்ட ஊசியை போட்டுக் கொண்ட 18 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு ஊசி போட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள நியூ ஹைதராபாத்தில் உள்ள பாரபங்கி பகுதியைச் சேர்ந்தவர் விவேக் மவுரியா(28). இவர் வீட்டில் 18 வயது சிறுமி குடும்பத்தினருடன் வசித்து வந்தார். விவேக் போதைப் பொருளுக்கு அடிமையானவர். இவர் மூலம் சிறுமிக்கும் அந்த பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாநகர் இல்லத்தில் இருந்து பெங்களூரு ரயிலைப் பிடிக்க ஏப்ரல் 7-ம் தேதி சிறுமி சென்றுள்ளார். அவரை திவாரிகஞ்சில் உள்ள நண்பரின் காலி மனைக்கு அழைத்துச் சென்ற விவேக், போதை ஊசியை செலுத்தியுள்ளார். அந்த நேரத்தில் விவேக் போதையில் இருந்துள்ளார். ஓவர் டோஸ் போதை மருந்து செலுத்தியதால் பாதிக்கப்பட்ட சிறுமி, அவசர உதவிக்கான தொலைபேசி எண்ணில் அழைத்துள்ளார்.
இதனால் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், போதையில் மயங்கிக் கிடந்த சிறுமியையும், விவேக்கையும் மீட்டு ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். இசிஜி பரிசோதனைக்குப் பின் சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
போதை மருந்து அதிகமாக உட்கொண்டதால் சிறுமியை கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என்று அவரின் குடும்பத்தினர் போலீஸில் அச்சம் தெரிவித்தனர். இறந்த சிறுமியின் தாய் அளித்த புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், விவேக் மவுரியாவை கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கூடுதல் போதை மருந்து செலுத்தினால் என்ன ஆகும் என்ற த்ரில்லுக்காக சிறுமிக்கு அவர் ஓவர் டோஸ் மருந்தை சிறுமிக்கு செலுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். முதலில் அவர் தனக்குத்தானே செலுத்திய பின்பு, பின்னர் சிறுமிக்கு ஊசி போட்டார் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் மரணம் குறித்து தகவல் அறிந்ததும் விவேக் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சிறுமியின் தாய் அளித்த புகாபரின் பேரில், விவேக்கை போலீஸார் கைது செய்தனர். மகாநகரில் தங்கியிருந்த விவேக்குடன் சிறுமி நட்பு கொண்டிருந்தார் என்று காவல் அதிகாரி அனிந்த்யா விக்ரம் சிங் கூறினார்.
விவேக் மீது ஐபிசி பிரிவு 302 (கொலை) பிரிவின் கீழ் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் விசாரணையின் போது அது ஐபிசி பிரிவு 304 (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை) என மாற்றப்பட்டது என்று அனிந்தயா விக்ரம் சிங் கூறினார். போதை ஊசி போட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சொந்தமாக கோயில் கட்டிய பிரபல நடிகர்கள்!
தாய் கண் முன் மகன் வெட்டிக் கொலை... திருவேற்காட்டில் பயங்கரம்!
தொட்ட இடமெல்லாம் கொட்டும் கோடிகள்... கோழித் தீவன நிறுவனத்தில் 3- வது நாளாக சோதனை!
உங்க அப்பாவி கணவரை ஏன் ஏமாற்றினீர்கள்... ரசிகரின் கேள்விக்கு நாசூக்காக பதில் சொன்ன சமந்தா!