பாமகவினர் சூர்யாவை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும்!

அன்புமணிக்கு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை
சூர்யா - ‘ஜெய் பீம்’
சூர்யா - ‘ஜெய் பீம்’

சூர்யாவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியாகி, தொடர் விவாதங்களைக் கிளப்பிவருகிறது ‘ஜெய் பீம்’ திரைப்படம். இத்திரைப்படத்தில் வில்லனாகக் காட்டப்பட்ட காவல் அதிகாரியின் வீட்டில், அக்னி கலசப் படம் கொண்ட காலண்டர் காண்பிக்கப்பட்டதற்கு வன்னியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்தப் படம் மாற்றப்பட்டது.

குறிப்பாக, அந்தக் காவல் துறை அதிகாரியின் பெயர் குருமூர்த்தி என்று இருந்ததற்கும் அக்னி கலசப் படம் காட்டப்பட்டதற்கும் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து, சூர்யாவுக்கு கடிதம் எழுதினார். அதையடுத்து, அன்புமணிக்கு விளக்கம் அளித்து சூர்யா பதில் கடிதம் எழுதினார். ஆனாலும், பாமகவினர் பலர் சூர்யாவைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். சூர்யாவை அடித்தால் லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பாமகவின் மாவட்டச் செயலாளர் ஒருவர் அறிவித்தது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து #westandwithsuriya ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.

சூர்யா - ‘ஜெய் பீம்’
நிறம் மாறுகிறதா தமிழ் சினிமா?

இந்நிலையில், தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, அன்புமணி ராமதாஸுக்குக் கோரிக்கைவைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களால் காண்பிக்கப்பட்ட தங்கள் கட்சியின் முத்திரையை நீங்கள் அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தீர்கள். எங்களுடைய தென்னிந்திய வர்த்தக சபையின் உறுப்பினர் சூர்யா உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து அந்தக் காட்சியை உடனடியாக நீக்கிவிட்டார்.

 ‘ஜெய் பீம்’ -சர்ச்சைக்குரிய காட்சி
‘ஜெய் பீம்’ -சர்ச்சைக்குரிய காட்சி

அந்த முத்திரையைப் படத்தில் பயன்படுத்தியதில் தயாரிப்பு நிறுவனத்துக்கோ படத்தின் கதாநாயகன் சூர்யாவுக்கு எள்ளளவும் தொடர்பு இல்லாத நிலையில், உங்கள் கட்சியினர் சூர்யாவைத் தொடர்ந்து விமர்சித்துவருவது எங்கள் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபைக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. அரசியல், ஜாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன், விளிம்பு நிலை மாணவர்கள் மீது விருட்சமான பார்வை கொண்டு கல்விப் பணியில் கலங்கரை விளக்காய் செயலாற்றிவரும் சூர்யாவை விமர்சிப்பதைத் தவிர்க்கும்படி வருத்தத்துடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் வன்னியர்களைத் தவறாகச் சித்தரித்ததற்காக சூர்யா ரூ. 5 கோடி அபராதம் செலுத்தக் கோரி வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in