சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும்
'மரகத நாணயம்' புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'வீரன்' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சமீபத்தில் நடந்தது. இதில் ‘வீரன்’ கதை தொடர்பாக எழுந்த சந்தேகம் குறித்து அவர் பேசியுள்ளார்.
இயக்குநர் சரவணன் பேசியதாவது, "கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் இந்த கதை எழுதி முடித்துவிட்டேன். அப்போதே ஆதியிடம் இந்த கதையை சொன்னேன். இந்த கதையில் உள்ள ஃபேன்டசி சூப்பர் ஹீரோ விஷயங்கள் போன்றவற்றின் மீது நம்பிக்கை வைத்து இந்த கதை அவருக்கு பிடித்திருந்தது. இந்த படம் நடக்க காரணமாக இருந்த அர்ஜுன் சாருக்கும் நன்றி. ஆதி இரண்டு படம் இயக்கிவிட்டார். அவரை எப்படி ஹீரோவாக ஹேண்டில் செய்வீர்கள் என்று நிறைய பேர் சொன்னார்கள். ஆனால் அது போன்று எந்த முரணும் எங்களுக்குள் நடக்கவில்லை. அந்தளவுக்கு எங்கள் இரண்டு பேருக்கும் புரிதல் இருந்தது. ஒளிப்பதிவாளர் தீபக்குக்கு நன்றி. எடிட்டர் பிரசன்னாவை பற்றி இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.
சூப்பர் ஹீரோ கதை செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்த பொழுது, ஒரு கேரக்டருக்கு கையில் இருந்து எலக்ட்ரிக் பவர் வந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சொன்ன ஐடியா தான் கதையாக டெவலப் செய்தோம். ஆதியின் கதாபாத்திரத்திற்கு மட்டும் கீர்த்தி, கிட்டத்தட்ட ஒரு பத்து காஸ்டியூம் டிசைன் செய்தார். அவருக்கும் நன்றி. படத்தில் சூப்பர் ஹீரோ எலமெண்ட்டுடன் ஸ்டண்ட் வித்தியாசமாக இருக்கும். மேத்யூ சிறப்பாக செய்து இருக்கிறார். 35 - 40 நிமிடங்கள் படத்தில் சிஜி வரும். நாங்கள் கொடுக்கப்பட்டுள்ள பட்ஜெட்டுக்குள் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தோம். ஆனால் அதுவும் தாண்டிவிட்டது. ஆனாலும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இன்னும் நிறைய டிபார்ட்மெண்ட் இருக்கிறது. அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவர்களுடைய வேலை குறித்தும் நான் பகிர்ந்து கொள்கிறேன். 'மின்னல் முரளி', 'வீரன்' இரண்டு படத்தின் கதையும் ஒன்றா என்ற விஷயம் பலரும் கேட்கிறார்கள். 'மின்னல் முரளி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 2018-ல் வெளியான போது நாங்கள் அந்த படத்தின் கதையையும், எங்கள் கதையையும் கிராஸ் செக் செய்துவிட்டோம். இரண்டும் வெவ்வேறு கதைகள். 'வீரன்' கதை ஆரம்பித்த 10 நிமிடங்களிலேயே இது முற்றிலும் வேறு என்பது உங்களுக்கு தெரியும்" என்றார்.