பெண் சக்தி

தாம்பத்ய உறவு பிரசவத்தை எளிதாக்கும்!?" அவ(ள்) நம்பிக்கைகள்!

டாக்டர் சசித்ரா தாமோதரன்

நம்பிக்கை:

"கர்ப்பகாலத்தில் தாம்பத்ய உறவு பிரசவத்தை எளிதாக்கும்."

உண்மை:

பொதுவாகப் பெண் கருத்தரித்த ஆரம்ப மாதங்களில் உடலுறவு கருச்சிதைவை ஏற்படுத்தலாம் என்றும், அதேசமயம் பிந்தைய மாதங்களில் உடலுறவு பிரசவத்தை எளிதாக்கும் என்றும் நம்பிக்கைகள் இருப்பதை கேள்விகள் மூலம் உணரமுடிகிறது.

உண்மையில் கருச்சிதைவுக்கும், உடலுறவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றாலும், அடுத்தடுத்து கருச்சிதைவு (Recurrent Pregnancy Loss) நிகழும் பெண்களில் மட்டும் முதல் 3 மாதங்கள் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. இவர்களுக்கு ஏதேனும் இரத்தக்கசிவு ஏற்பட்டால் அது எதன் காரணமாக ஏற்பட்டது என்ற குழப்பத்தைத் தவிர்க்க மட்டுமே, இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல 8 அல்லது 9-வது மாதங்களில் தாம்பத்ய உறவு நிச்சயம் சுகப்பிரசவத்துக்கு உதவாது.

முன்னரே சொன்னது போல, சுகப்பிரசவம் எனும் இயற்கை நிகழ்வுக்கு முக்கியக் காரணங்களாக இருப்பது பவர், பாசேஜ், பாசஞ்சர் என்ற மூன்று 'P' தான். இதில் இவற்றைத் தவிர மற்றவை எந்த விதத்திலும் உதவுவதில்லை. முக்கியமாக உணவு மற்றும் உடலுறவு சுகப்பிரசவத்துக்கு உதவாது என்பதே உண்மை.

மேலும், முந்தைய கர்ப்பத்தில் குறைப்பிரசவம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது இந்த கர்ப்பத்தில் நஞ்சு கீழிருக்கும் நிலை, பனிக்குட நீர் அதிகம் உள்ள நிலை போன்ற அதிக இடர்கள் நிறைந்த கர்ப்பத்தில் உடலுறவைத் தவிர்ப்பதும் நல்லது.

அனைத்துக்கும் மேலாக, உடலுறவு என்பது இருவரது விருப்பம் மற்றும் மனம் சம்பந்தப்பட்டது என்பதால், அவரவர் விருப்பத்துக்கேற்ப இது இருக்க வேண்டுமே ஒழிய, நிச்சயம் சுகப்பிரசவத்துக்காக அல்ல.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
SCROLL FOR NEXT