தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ‘#அக்கா 1825’ என்ற பெயரில் தனக்கான தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதற்குமான தங்களின் செயல் திட்டத்தை தேர்தல் வாக்குறுதிகளாக பாஜக வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னைக்காக தனியாக தனது செயல் திட்டங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். 5 ஆண்டுகள் 365 நாட்களும் பணியில் இருப்பேன் என்ற உறுதியின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவரது தேர்தல் அறிக்கையில், ’தென் சென்னையின் சட்டப்பேரவை தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி. சோழிங்கநல்லூர் ஆகிய 6 தொகுதிகளிலும் எம்பி அலுவலகங்கள் அமைக்கப்படும், பொதுமக்களின் குறைகள் நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘தனி மொபைல் செயலி, மற்றும் வாட்சப் எண் (9550999991) மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தென் சென்னை மக்கள் சந்தித்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோதாவரி ஆற்று நீரை சென்னைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், அரசன்கழனி, கல்லுக்குட்டை, செம்மஞ்சேரி, புதுதங்கல், வெட்டுவான்சுனி, நீலாங்கரை, கோவிலம்பாக்கம், அக்கரை, நாராயணபுரம், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட மொத்தம் 25 நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு மீட்டெடுக்கப்படும்.
சோழிங்கநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து மழை நீர் ஒக்கியம் மடுவு வரை செல்ல மிகப்பெரிய அளவில் மழை நீர் கால்வாய் அமைக்கப்படும். விருகம்பாக்கம் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். புதிய வழித்தடத்தில் மெட்ரோ - 3 திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தென் சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில்-2 திட்டப் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆண்டுக்கு 10,000 பெண்களுக்கு உத்தரவாதமான வேலை வாய்ப்புகளுடன் பயிற்சி அளிப்பதற்கு மையங்கள் அமைக்கப்படும். பணிபுரியும் பெண்களுக்காக மோடி இலவச ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படும். பொதுமக்கள் தங்கள் குடும்ப விழாக்களையும், சமூக விழாக்களையும் குறைந்த கட்டணத்தில் நடத்திக் கொள்வதற்கு ஏற்ப தென் சென்னையின் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆறு சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் அமைக்கப்படும்.
குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்’ என்பன உட்பட 1,825 வாக்குறுதிகள் மற்றும் திட்டங்களை தமிழிசை தனக்கான தேர்தல் அறிக்கையாக தந்திருக்கிறார்.
சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!
நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!
மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!