ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இந்துத்துவா கொள்கையை அதிமுக கைவிட்டு விட்டதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்டத் தேர்தல் 428 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் நாளை(மே 25) நடைபெற உள்ளது. ஏழு மாநிலங்களில், 57 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
இதனை முன்னிட்டு டெல்லியில் தமிழகம் அதிகம் வசிக்கும் பகுதியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்துள்ளார்.
அப்போது தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்," அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மிகச்சிறந்த இந்துத்துவா தலைவர். அவர் நேரடியாக இந்து மதத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தார். அவர் இருந்த போது தமிழகத்தில் பாஜக இருந்தாலும், இந்து மதத்தினரின் ஆதரவு அவருக்கே பெரிதும் கிடைத்து வந்தது.
இந்து மதத்தின் வளர்ச்சிக்காக அவர் பல சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளார்.அயோத்தி ராமர் கோயிலுக்கு, வெளிப்படையாக ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் மதமாற்ற தடுப்புச் சட்டத்தையும் அமல்படுத்தினார். தன் சம்பளத்தை கோயில்களுக்கு நன்கொடையாக அளித்தார். அத்துடன் கோயில் நகரமான ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டார்.
மேலும், கோயில்களுக்கு யானைகள் நன்கொடையாக அளித்தார். இதையெல்லாம் வைத்து அவருடைய இந்து மதப்பற்றை தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஆனால், அவருடைய மறைவுக்குப் பின், அதிமுக அந்தக் கொள்கையை கைவிட்டு விட்டது. அதனால், தமிழகத்தில் உள்ள இந்துத்வா கொள்கைக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜக, நிரப்பி வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாஜகவை ஆதரிக்கின்றனர். இந்த மக்களவைத் தேர்தலில், பாஜகவின் வாக்கு சதவீதம், இரட்டை இலக்கமாக மாறும். தமிழகத்தில் பாஜக இனி மற்ற கட்சிகளின் தயவில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழக சட்டப்பேரவைக்கு, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு, 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை இப்போதே அறிவிக்க கட்சித் தலைமையை வலியுறுத்த உள்ளேன். இதற்கு மக்கள் ஆதரவை திரட்ட மற்றொரு பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளேன்.
அடுத்த ஆண்டில், 75 வயதாவதால், பிரதமர் நரேந்திர மோடி ஓய்வு பெற்று விடுவார் என கூறுகின்றனர்; உடல் தகுதி, கடின உழைப்பு, மக்களிடையே செல்வாக்கு என எதை எடுத்துக் கொண்டாலும், தன்னை விட வயதில் இளையவர்களான காங்கிரஸ் கட்சியின் ராகுல், ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோரை விட, மூன்று மடங்கு அதிக திறன்களை பிரதமர் மோடி கொண்டுள்ளார். அதனால், அவர் நீண்ட காலத்துக்கு தொடர்வார்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
சாட்டையால் அடிவாங்கும் விநோத திருவிழா... பயபக்தியுடன் குவிந்த பக்தர்கள்
பாஜகவின் டபுள் இஞ்சின் இம்முறை கட்டாயம் தடம் புரளும் -அகிலேஷ் யாதவ் ஆருடம்
அதிர்ச்சி... மினிபேருந்து மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி!
விடிய விடிய நடந்த விருந்தில் கொக்கெய்ன், ஹைட்ரோ கஞ்சா அடித்த நடிகைகள்... பெங்களூருவில் நடந்தது என்ன?