கோவையில் சந்தனமரம் வெட்டிக் கடத்தல் 
செய்திகள்

கோவையில் துணிகரம்... வருமான வரித்துறை அலுவலகம் எதிரில் இருந்த சந்தனமரம் வெட்டிக்கடத்தல்!

கே.காமராஜ்

கோவையில் மக்கள் மற்றும் போலீஸ் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் சாலையோரம் இருந்த சந்தன மரம் வெட்டிக் கடத்தப்பட்டது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பந்தய சாலை பகுதி, ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றின் அருகே அமைந்துள்ளது. இங்கு கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம், கோவை மண்டல துணை காவல்துறை தலைவர் அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம், வருமான வரித்துறை அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளது. இதன் அருகிலேயே ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றின் தளங்கள் உள்ள ரெட் ஹில்ஸ் பகுதியும் அமைந்துள்ளது.

கோவை வருமான வரி அலுவலகம்

ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ள இப்பகுதியில் எப்போதும் காவல்துறை நடமாட்டம் இருக்கும். இப்பகுதியில் 3 கல்லூரிகள் மற்றும் ஏராளமான நிறுவனங்களின் தலைமையகங்கள், கடைகள் ஆகியவையும் அமைந்துள்ளது. மேலும் காலை, மாலை வேளைகளில் இங்குள்ள நடைபாதையில் ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இங்குள்ள வருமான வரித்துறை அலுவலகம் எதிரே உள்ள நடைபாதையில் சுமார் 20 ஆண்டுகளான சந்தனமரம் ஒன்று வளர்ந்திருந்தது. இன்று காலை அவ்வழியே சென்றவர்கள், மரம் வெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கோவை பந்தய சாலை காவல் நிலையம்

அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பந்தயசாலை காவல் நிலைய போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, மரத்தை வெட்டிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக்கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ள பகுதியில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

SCROLL FOR NEXT