டாக்டர் சி.என்.மஞ்சுநாத், குமாரசாமி 
செய்திகள்

மத்திய அமைச்சர் பதவி எனக்குத் தான்... முட்டி மோதிக்கொள்ளும் தேவகவுடா மகன், மருமகன்!

கவிதா குமார்

கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் குமாரசாமியும், மருமகன் டாக்டர் சி.என்.மஞ்சுநாத்தும் அமைச்சர் பதவிக்கு முட்டி மோதிக்கொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. இதன் காரணமாக , சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என பாஜக முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள்

இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி புறப்படும் முன் பெங்களூருவில் பாஜக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் சி.என்.மஞ்சுநாத் செய்தியாளர்களைச் சந்தித்தார். கர்நாடகா துணைமுதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரும், காங்கிரஸ் எம்.பியுமான டி.கே.சுரேஷை எதிர்த்து போட்டியிட்ட மஞ்சுநாத் 56,21 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

டாக்டர் சோழனஹள்ளி நஞ்சப்பா மஞ்சுநாத் என்ற சி.என்.மஞ்சுநாத் புகழ்பெற்ற இதய நோய் மருத்துவர் ஆவார். அத்துடன் முன்னாள் பிரதமர்.எச்.டிதேவகவுடாவின் மருமகனாவார்.

டாக்டர் சி.என்.மஞ்சுநாத்

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகிறார். அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். கூட்டணி அரசாக இருப்பதில், ஒவ்வொரு கட்சிகளுக்கும் சொந்த பிரச்சினைகள் உள்ளன. அமைச்சர் பதவி குறித்து இப்போது நான் எதுவும் கூற முடியாது. ஆனால், நான் சுகாதாரத்துறை அமைச்சராக வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்" என்றார்.

இதனிடையே, டெல்லியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா எம்.பியான எச்.டி.குமாரசாமி, "மத்திய அமைச்சர் பதவி குறித்து எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. இன்றைய தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளேன். மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைவதாக தகவல் வெளியாகியுள்ளது. எங்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நம்மால் நல்ல வேலை செய்ய முடியும் என்பது மேலே உள்ளவர்களுக்குத் தெரியும். அத்துடன் கர்நாடகா மாநில மக்களுக்கும் அந்த நம்பிக்கை உள்ளது " என்றார்.

குமாரசாமி - தேவகவுடா

மேலும் அவர் கூறுகையில்," மத்திய அமைச்சர் பதவி வழங்கினால் நன்றாக வேலையை செய்வேன். மஞ்சுநாத்துக்கு பதவி கொடுப்பது குறித்து பாஜக தலைவர்கள் தான் முடிவு எடுப்பார்கள். அமைச்சர் பதவி வழங்குமாறு எனக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை. பாஜக தலைவர்கள் பதவி கொடுத்தால், அந்த பொறுப்பை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்றார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சர் பதவிக்கு மோதிக் கொள்வது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

SCROLL FOR NEXT