காஷ்மீர் என்கவுன்டரில் பாதுகாப்பு படையினர் 
செய்திகள்

மீண்டும் புல்வாமா தாக்குதல்... பாதுகாப்பு படைகளுடனான மோதலில் 2 பயங்கரவாதிகள் பலி

எஸ்.எஸ்.லெனின்

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் இன்றைய தினம் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள நிஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையிலான மோதலில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புல்வாமா தாக்குதல் சம்பவம்

புல்வாமா தாக்குதல்களும், மக்களவைத் தேர்தல்களும் பிரிக்க முடியாதவையாக தொடர்கின்றன. கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் முடிவுகளை தீர்மானித்ததில் புல்வாமா தாக்குதலுக்கும் முக்கியப் பங்குண்டு. சிஆர்பிஎஃப் தொடரணி மீது பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 40க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கான பதிலடியாக, பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா தொடுத்த துல்லியத் தாக்குதல் ஆளும் கட்சியான பாஜகவின் மதிப்பை மக்களிடையே உயர்த்தியது.

இந்த 2019 புல்வாமா தாக்குதலை முன்வைத்து சர்ச்சைகளும் தொடர்ந்தன. சிஆர்பிஎஃப் வீரர்களின் உயிர்ப்பலியை அப்போதைய டெல்லி ஆட்சியாளர்கள் அலட்சியமாக கையாண்டதாகவும், வீரர்கள் பலியானதை தங்கள் வெற்றிக்கு பயன்படுத்திக் கொண்டதாகவும் முன்னாள் பாஜக தலைவர் மற்றும் ஆளுநரான சத்யபால் மாலிக் போன்றவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்கள்.

இந்த 2024 தேர்தலை முன்வைத்தும், பாஜக அரசு மற்றுமொரு புல்வாமா பாணியிலான சம்பவத்துக்கு காத்திருப்பதாக, அரசியல் விமர்சனங்கள் எழுந்தன. பஞ்சாப் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சரண்ஜித் சிங் சித்து போன்றவர்கள் இதற்காக தேர்தல் ஆணையத்தின் கண்டனத்துக்கும் ஆளானார்கள்.

சத்யபால் மாலிக்

2024 தேர்தலின் போதான ஒரு சில அசம்பாவிதங்களுக்கு அப்பால் ஜம்மு - காஷ்மீரில் அமைதியே நீடித்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முந்தைய தினமான இன்று, புதிய புல்வாமா தாக்குதல் அரங்கேறியதில், பயங்கரவாதிகள் இருவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் காவல்துறை கண்காணிப்பாளர் வி.கே.பிர்தி, இந்த என்கவுன்டர் சம்பவம் மற்றும் பயங்கரவாதிகள் பலியை உறுதி செய்துள்ளார். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் அவர்கள் சார்ந்த குழுவின் தொடர்பு உள்ளிட்டவை கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

SCROLL FOR NEXT