உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து 41 தொழிலாளர்களை மீட்ட, எலிவளை மீட்புக்குழுவைச் சேர்ந்த வக்கீல் ஹசன் என்பவரது டெல்லி வீடு, ஆக்கிரமிப்பு அகற்றத்தின் பெயரால் அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின்(டிடிஏ) ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கைகளில் ஒன்று, வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் வக்கீல் ஹசன் என்பவரது வீடும் இடித்துத் தள்ளப்பட்டது. இவர் கடந்த ஆண்டு உத்தராகண்ட் சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட எலிவளை தொழிலாளர்களில் ஒருவராவார்.
மத்திய அரசு அமைப்பின் இந்த நடவடிக்கையில் வக்கீல் ஹசனும் அவரது குடும்பத்தாரும் தங்களது வீட்டை இழந்து தெருவுக்கு வந்துள்ளதாக கண்ணீர் விட்டனர். டிடிஏ-ன் இந்த நடவடிக்கை தொடர்பாக தங்களுக்கு எந்த முன் அறிவிப்பும் வழங்கப்படவில்லை என்று வக்கீல் ஹசன் உள்ளிட்டோர் புலம்பினார்கள். "உத்தரகாண்டின் சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து 41 பேரைக் காப்பாற்றியதற்கான பரிசாக, எங்கள் வீடு இடிக்கப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் வக்கீல் ஹசன்.
குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினரோடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும், தங்களில் சிலரை போலீஸார் அடிப்பதாகவும், உறவினர்களுக்கு வக்கீல் ஹசன் வாட்ஸ் ஆப் தகவல் பகிர்ந்திருக்கிறார். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு சுரங்கத் தொழிலாளியான முன்னா குரேஷி, "அரசாங்கம் எங்களுக்கு வீடு தருவதாக உறுதியளித்து இருந்தது. ஆனால் தற்போது எங்களுக்கு நிழல்தந்து வந்த அரைகுறை வீட்டையும் பறித்துவிட்டது" என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.
தங்கள் மீதான குற்றச்சாட்டினை மறுக்கும் டிடிஏ அதிகாரிகள், முன்னறிவிப்புடனே வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் வீடு உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா-பார்கோட் சுரங்கப்பாதை இடிந்ததில், அதனுள் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதற்காக வரவழைக்கப்பட்ட இறக்குமதி தளவாடங்கள், பெரு நிறுவனங்களின் ஏற்பாடுகள் என பலவும் தோல்வியடைந்தது. அந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தடைசெய்யப்பட்டிருந்த எலிவளை தொழிலாளர்கள் டெல்லியிலிருந்து வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்த வேகத்தில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, 17 நாட்களாக சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் அனைவரையும் மீட்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் தமிழகத்தில் 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!
திமுக - மநீம தொகுதி உடன்பாடு இன்று கையெழுத்தாக வாய்ப்பு!
குட்நியூஸ்... தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: நாளை தொடங்குகிறது!
அதிமுக முன்னாள் பெண் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு...16 கோடி ரூபாய் ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு!
கூச்சமே இல்லாமல் எப்படி வருகிறீர்கள்?: பிரதமர் மோடி மீது சாட்டை சொடுக்கிய திமுக!