ராமநாதசுவாமி கோயில் 
ஆன்மிகம்

பிரதமரின் வருகையால் ராமேஸ்வரம் கோயிலில் எகிறிய உண்டியல் காணிக்கை - 16 நாளில் இவ்வளவா?

காமதேனு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 16 நாளில் உண்டியல் நிறைந்ததை அடுத்து, காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் காணிக்கையாக ஒரு கோடியே 58 லட்சம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உலகப் பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில் இலங்கைக்கு படையெடுத்து சென்ற ராமபிரான், ராவணனை கொன்ற பிறகு, தன்னை பீடித்த பிரம்மஹத்தி தோஷத்தை தீர்ப்பதற்காக, ராமேஸ்வரம் கடற்கரைக்கு வந்துள்ளார். அங்கு தன் கைகளால் மணலில் சிவலிங்கம் உருவாக்கி, சிறப்பு பூஜைகளை நடத்தியதாகவும், ராமபிரான் வழிபட்ட அந்த லிங்கமே தற்போது ராமநாதசுவாமி கோயிலில் மூலவராக இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் எண்ணும் பணி

தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்ட ராமநாதசுவாமி கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தென் மாநிலங்களிலிருந்து மட்டுமின்றி, வடமாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். இங்குள்ள பல்வேறு தீர்த்தங்களில் நீராடுவதன் மூலம், கங்கையில் குளித்ததற்கு இணையான பாவவிமோசனம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் ஆண்டு முழுவதும் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

ரூ.1.58 கோடி வசூலானதாக தகவல்

இதனிடையே கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை, தொடர் பள்ளி விடுமுறைகள் ஆகியவற்றின் காரணமாக பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. மேலும் கடந்த ஜனவரி 21ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக சுற்றுப்பயணத்தின் போது ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடியதோடு, கோயிலில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தி இருந்தார். இதையொட்டியும் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில் பக்தர்களின் தொடர் வருகை காரணமாக உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கையின் அளவு அதிகரித்தது. ராமநாதசாமி கோயில் மட்டுமின்றி அதன் உப கோயில்களிலும் இந்த முறை விரைவாகவே உண்டியல் நிறைந்தது. இதையடுத்து உண்டியலில் சேகரமான காணிக்கையை என்னும் பணிகள் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு கோபுரம் மண்டபத்தில் நடைபெற்றது. பல்வேறு கோயில்களில் இருந்தும் பணியாளர்கள் மூலம் எடுத்துவரப்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு தன்னார்வலர்கள் மற்றும் உழவாரப்பணிகள் மேற்கொள்பவர்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி

கடந்த மாதம் உண்டியல் எண்ணப்பட்டு 16 நாட்களுக்குள் மீண்டும் உண்டியல் நிறைந்திருந்த நிலையில், காணிக்கை எண்ணும் பணியின் நிறைவில், ஒரு கோடியே 58 லட்சத்து 38 ஆயிரத்து 317 ரூபாய் ரொக்கப் பணம், 70 கிராம் தங்கம், 12 கிலோ 890 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT