திரையரங்கு 
க்ரைம்

இந்தி படம் வெளியான திரையரங்குகளில் மர்மப் பொருள் வீச்சு...கனடாவில் பரபரப்பு!

காமதேனு

கனடாவில் இந்தி திரைப்படங்கள் வெளியிடப்பட்ட திரையரங்குகளுக்குள் மர்ம நபர்கள் சிலர் மர்மப் பொருளை தெளித்ததால், ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வரும் நிலையில் அங்குள்ள திரையரங்குகளில் இந்தி திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் அந்நாட்டின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள டொரண்டோ நகரில் மூன்று திரையரங்குகளில் இந்தி திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, இதனை சுமார் 200-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர்.

திரையரங்கில் இருந்து வெளியேறும் பார்வையாளர்கள்

டொரண்டோ நகரில் திரையரங்கிற்குள் முகமூடி அணிந்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர், திடீரென காற்றில் மர்ம பொருள் ஒன்றை தெளித்துள்ளார். இதனால் திரைப்படத்தை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கண் மற்றும் உடலில் எரிச்சல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அனைவரும் உடனடியாக திரையரங்கில் இருந்து வெளியேறினர். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முகமூடி அணிந்த மர்ம நபர்களின் படம் வெளியீடு

இதனிடையே இதே போல வாகன், பிராம்டன், ஆகிய நகரங்களில் உள்ள 2 திரையரங்குகளிலும் இதே போன்ற சம்பவம் அடுத்தடுத்து அரங்கேறியது. மர்மப் பொருள் தெளிக்கப்பட்டதால் அனைவருக்கும் இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இருப்பினும் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் மர்மப் பொருளை வீசிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தி திரைப்படங்கள் ஓடிய திரையரங்குகளை குறிவைத்து தாக்குதல்

இந்த சம்பவம் கனடாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்தியாவிற்கும், கனடாவிற்கும் இடையே சீக்கிய தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது, இந்தியாவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT