மசக்கை இனிக்குமா..?

அவள் நம்பிக்கைகள்-5
மசக்கை இனிக்குமா..?

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும், மிகவும் மகிழ்ச்சியான, மன நிறைவானதொரு தருணம்தான். இருப்பினும் அது அவ்வளவு சுலபமானதும் இல்லை.

விடாத வாந்தி, தலைச்சுற்றல், குமட்டல், சோர்வு என்று கசப்பான நாட்களோடுதான் தாய்மை என்பது 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்குத் தொடங்குகிறது.

மசக்கை என்பதை மருத்துவர்கள் ’மார்னிங் சிக்னஸ்’ என்று அழைக்கின்றனர். உண்மையில், இந்த ஆரம்பக்கால வாந்தி, காலை வேளைகளில் மட்டுமல்லாமல், எல்லா வேளைகளிலும், குறிப்பாக இரவு உணவின்போது அதிகம் காணப்படுகிறது என்றாலும், கர்ப்பகாலத்தின் முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் முடியும்போது மெல்லக் குறைந்தும் விடுகிறது.

ஹார்மோன்கள் படுத்தும்பாடு!

இந்த கர்ப்பகால வாந்தி முதல் மூன்று மாதங்களில் அதிகம் காணப்படுவதற்கு கருவுற்ற தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்தான் முக்கிய காரணமாகும். அதாவது கருவின் வளர்ச்சிக்கு உதவும் கர்ப்பகால ஹார்மோன்களான ஹெச்.சி.ஜி. (Human Chorionic Gonadotropin), ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் ப்ரொஜஸ்டிரான்கள் கர்ப்பகாலம் முழுவதும் தாயின் உடலில் சுரக்கின்றன. என்றாலும், கருவின் வளர்ச்சி துரிதமாகவும், சற்று அதிகமாகவும் இருக்கும் முதல் மூன்று மாதங்களில் ஹார்மோன்களும் அதிகம் சுரக்கிறது.

அதாவது, கருவுற்ற முதல் நூறு நாட்களில், கருவின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க, இந்த ஹார்மோன்களும் அதிகம் சுரப்பதால்தான், அந்த மாற்றத்தை உடல் ஏற்றுக்கொள்ள நடக்கும் மாற்றங்கள் வாந்தியை உண்டாக்கிச் சோர்வையும் அதிகப்படுத்துகிறது. பின்னர், அதுவே படிப்படியாகக் குறைந்து, நான்கு அல்லது ஐந்து மாதங்களில், கருவுற்ற பெண்ணை இயல்புநிலைக்குத் திரும்பச் செய்கிறது. அதேநேரம் நூற்றில் ஓரிருவருக்குப் பிரசவ காலம்வரை இந்த வாந்தி நீடிப்பதும் உண்டு.

பொதுவாக, "பிறக்கும் குழந்தைக்கு, தலைமுடி அதிகம் இருந்தால், அம்மாவின் வாந்தி அதிகமாக இருக்கும்" என்று கிராமப்புறங்களில் பெரியவர்கள் சொல்வது உண்டு.

இது பற்றி ‘அவ நம்பிக்கைகள்’ பகுதி 2-ல் விரிவாகப் பேசினோம் . ஆனால், உண்மையில் உள்ளே வளரும் குழந்தையின் முடி அதிகம் இருந்தால் அல்ல, குழந்தையே அதிகம் இருந்தால் தான்... அதாவது ’ட்வின்ஸ்’, ’ட்ரிப்லெட்ஸ்’ என கருவிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், உடலில் ஏற்படும் அதிகளவு ஹார்மோன் மாற்றங்களால் வாந்தியும் அதிகமாகக் கூடும்.

அச்சமூட்டும் சந்தேகங்கள்!

"ஒரு சொட்டு தண்ணி கூட உள்ளே இறங்கல டாக்டர்... படுத்தே கிடக்கா..."

"இப்படி எக்கி எக்கி வாந்தி பண்ணா, குழந்தைக்கு ஏதாச்சும் ஆயிடுமா..?"

"ரத்தமா வாந்தி எடுக்கறா. எதும் தப்பில்லையே டாக்டர்?"

- போன்றவைதான், கர்ப்பகால வாந்தியின்போது பொதுவாக எல்லோரும் தவிப்புடன், பயத்துடன் கூறும் வார்த்தைகள்.

இப்படிப்பட்ட கர்ப்பகால வாந்தியை எப்படி சமாளிப்பது, எப்போது மருத்துவரை அணுகுவது, வாந்தி மருந்துகள் உட்கொள்வதால் பாதிப்பு எதுவும் ஏற்படுமா போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் பயமனைத்தும் நீங்கிவிடும் அல்லவா!

3 லிட்டர் நீர் பருகுதல் நல்லது!

முதலில், தொடர் வாந்தியால், நீர்த்தன்மை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீராவது கருவுற்ற தாய் பருகுவது அவசியம். வாந்தியின்போது தண்ணீரை அப்படியே பருக முடியாதபோது, மற்ற நீர் பானங்களான இளநீர், ஜூஸ், சூப் அல்லது மோர் போன்றவற்றை உட்கொள்வதும், அதேபோல பழங்களை நேரடியாக உண்பதும் பயனளிக்கும். பொதுவாகப் புளிப்பான பழங்கள் வாந்திக்கு ஏற்புடையன என்பதால் அவற்றை உட்கொள்வதும் நல்லது.

அடுத்து, வாந்தியின்போது உடலுக்குத் தேவையான கலோரிகள் தாய்க்குக் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். கர்ப்பகாலத்தில் வாந்தி அதிகமிருக்கும் போது, சத்தான உணவுகளைத் திணித்து, அவற்றை அப்படியே வாந்தியெடுக்கச் செய்வதைக் காட்டிலும், எந்த உணவை பெண்ணின் உடல் ஏற்றுக் கொள்கிறதோ, அதை உண்ணக் கொடுப்பது நலம்.

அதுவும், குறைந்த அளவிலான உணவை, சிறுசிறு இடைவெளிகளில், அதாவது ஒரு நாளில் மூன்று முறைக்குப் பதிலாக ஆறு அல்லது ஏழு முறையாகப் பிரித்துக் கொடுப்பது சோர்வைத் தவிர்க்க உதவும். அதிலும் ஆவியில் வேகவைத்த அரிசி உணவுகளான இட்லி, இடியாப்பம், கஞ்சி ஆகியனவும், கோதுமை உணவுகளான ரொட்டி, பன் ஆகியனவும் சுலபமாகச் செரிமானம் அடைவதுடன் வாந்தியின் காரணமாக ஏற்பட்ட தொண்டை மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு இதமாகவும் இருக்கும்.

ரத்த வாந்தி ஆபத்தா?

இதுபோன்ற சமயங்களில் பெண்ணின் சுவையுணரிகள், தினசரி உணவை வெறுக்கச் செய்வதோடு, புளிப்பு மிட்டாய்கள், இஞ்சி அல்லது எலுமிச்சை சேர்த்த உணவுகள், உவர்ப்பு நிறைந்த ஊறுகாய்கள் ஆகியவற்றைத் தேடி உட்கொள்ளச் செய்யும். என்றாலும் அதிக எண்ணெய், அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த சைவ, அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

மேலும், அதிக வாந்தியின்போது தொண்டையில் உண்டாகும் புண் காரணமாக, ஒரு சிலரில் ரத்தம் கலந்த வாந்தி ஏற்படக்கூடும் என்பதால், அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதேபோல, வாந்தியின் போது உண்டாகும் அதிக வயிற்று அழுத்தம், கருவை எப்போதும் பாதிப்பதில்லை.

மருத்துவரை அணுகுவது அவசியமா?

பெரும்பாலும் வாந்திக்கு எளிய வீட்டு வைத்தியங்களும், உணவு மாற்றங்களுமே பலனளித்துவிடும். அப்படி பலனளிப்பது தாமதமானால் மட்டும் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

அதாவது ஒரு கர்ப்பிணி தொடர்ந்து வாந்தி எடுக்கும்போதும், மிகவும் சோர்வாக உணரும்போதும், அடிவயிற்று வலியுடன் அல்லது எரிச்சலுடன் குறைந்த அளவில் சிறுநீர் கழிக்கும்போதும், எடை குறையும்போதும், பிறரின் உதவியுடன் மட்டுமே எழுந்து நடமாடும் நிலையின்போதும் உடனடியாக மருத்துவரை அணுகுதல் அவசியம்.

மகப்பேறு மருத்துவர், அந்த கர்ப்பிணிப் பெண்ணை பரிசோதித்து, தேவைக்கேற்ப மருந்துகளோ அல்லது சலைன் ட்ரிப்ஸையோ பரிந்துரைக்கக் கூடும்.

இவற்றில் கர்ப்பகால வாந்திக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளான டாக்சைல் அமைன், ஆன்டன்செட்ரான், வைட்டமின் பி 6 ஆகியவற்றால், வளரும் குழந்தைக்குப் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்பதுடன் இந்த மருந்துகள் இருவருக்குமே பாதுகாப்பானவை என்பதால் மருத்துவ ஆலோசனையுடன் இவற்றை உட்கொள்ளலாம். அத்துடன், உணவு செரிமானத்தை அதிகரிக்கும் ப்ரோபயாடிக் (probiotics) மாத்திரைகளும் நல்லது.

கர்ப்பகால வாந்தி என்பது சற்று சிரமமான விஷயம்தான் என்றாலும், அதை கர்ப்பிணியும், உடனிருப்போரும் புரிந்து கொண்டால் உண்மையில் மசக்கையும் இனிக்கும்.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
மசக்கை இனிக்குமா..?
கருப்பைக்கு வெளியிலும் குழந்தை வளருமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in