`காவிரி ஆணையத்தை கலைக்க தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும்'- பெ.மணியரசன்

`காவிரி ஆணையத்தை கலைக்க  தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும்'- பெ.மணியரசன்

``மேகேதாட்டுக்கு அனுமதி கொடுக்கவே காவிரி ஆணையம் கூட்டப்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசு அந்த ஆணையத்தைக் கலைக்கக் கோர வேண்டும்'' என்று காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``காவிரி உரிமைச் சிக்கலில், இந்திய அரசு சட்டத்திற்குப் புறம்பாகவும், நடுநிலை தவறியும், கர்நாடகத்திற்குப் பக்கச் சாய்வாகவே இதுவரை செயல்பட்டு வந்துள்ளது. அது காங்கிரஸ் அரசாக இருந்தாலும், பா.ஜ.க. அரசாக இருந்தாலும் அவற்றின் ஓரவஞ்சனைச் செயல்பாட்டைப் பல தடவைப் பார்த்துள்ளோம்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், 17.6.2022 அன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தைக் கூட்ட உள்ளதாகவும், அதில் கர்நாடகத்தின் மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்குவது பற்றி விவாதிக்கப்படும் என்றும் உறுதிபடக் கூறியுள்ளார்.

ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை அனுமதி குறித்து, விவாதிக்கப் பொருள் நிரலில் சேர்த்த போதெல்லாம் தமிழ்நாடு அரசுப் பிரதிநிதிகள் அதை எதிர்த்து வந்ததால், அதை விவாதிக்க முடியாமல் போய்விட்டது. இதுகுறித்து சட்டவிளக்கம் அறிய, இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தை அணுகி விளக்கம் கேட்டதாகவும், அதன் சார்பில் இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அளித்த விளக்கத்தில், காவிரி தொடர்பான எந்தச் சிக்கலையும் விவாதித்து முடிவெடுக்கக் காவிரி மேலாண்மை ஆணையத்திற்குக் “கட்டற்ற அதிகாரம்” இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதாகவும் எஸ்.கே.ஹல்தர் கூறியுள்ளார்.

அந்த அடிப்படையில் 17.6.2022 அன்று மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகேதாட்டு அணை குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே 7.2.2022 அன்று மக்களவையில் கர்நாடகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மேகேதாட்டு அணைக்கு எப்போது அனுமதி கிடைக்கும் என்று கேட்டதற்கு, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் – வனத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் சுற்றுச்சூழல் – வனத்துறை அனுமதி கொடுத்துவிடும் என்று உறுதி அளித்தார். அதை அப்போதே கண்டித்து 8.2.2022 அன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நான் அறிக்கை வெளியிட்டேன்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ளபடி தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரைத் திறந்துவிட ஆணையிடும் அதிகாரம் மட்டுமே உள்ளது. காவிரியில் புதிய நீர்த்தேக்கங்கள் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கும் அதிகாரம் துளியும் இல்லை. உச்ச நீதிமன்றம் 2018-ல் அளித்த தீர்ப்பில் புதிய அணைகள் கட்ட அனுமதி வழங்கும் அதிகாரத்தை மேலாண்மை ஆணையத்திற்கு அளிக்கவில்லை.

அத்தீர்ப்புப்படித் தண்ணீர்ப் பகிர்வு அதிகாரம் பெற்றுள்ள ஆணையம் இதுவரை ஒரு தடவை கூட, கர்நாடகத்திடமிருந்து தமிழ்நாட்டிற்குரியக் காவிரி நீரைப் பெற்றுத் தந்ததில்லை. தண்ணீர்ப் பகிர்வு பற்றி முடிவு எடுப்பதிலும் சனநாயகமற்ற முறையில் – இந்திய அரசின் ஒருதலைச்சார்புக்கும் – கர்நாடகப் பக்கச் சாய்வுக்கும் விதி வைத்துள்ளார்கள்.

ஏற்கெனவே ஒன்றிய நீராற்றல் துறையின் தலைவராக இதே எஸ்.கே.ஹல்தர் இருந்தபோதுதான் கர்நாடக அரசிடம் மேகேதாட்டு அணைக்கு விரிவான திட்ட அறிக்கைக் கோரிப் பெற்று, அதற்கு அனுமதி வழங்கியதுடன் அதனை காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஏற்புக்காக அனுப்பி வைத்தார்.
இப்போது அதே ஹல்தர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மோடி அரசால் அமர்த்தப்பட்டு, சட்டத்திற்குப் புறம்பாக மேகேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

தமிழ்நாடு அரசு உடனடியாக இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உரியவாறு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். இதனைச் சுட்டிக்காட்டி, 17.6.2022 அன்று ஆணையக் கூட்டத்திற்கு இடைக்காலத் தடை ஆணை பெற வேண்டும். ஒருவேளை அந்த ஆணையக் கூட்டம் நடந்தால் அதைப் புறக்கணிக்க வேண்டும், புதுச்சேரியும், கேரளமும் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் வைக்க வேண்டும்.

அனைத்துக் கட்சிகள் - அனைத்து உழவர் அமைப்புகள் பங்குபெறும் வகையில் இந்திய அரசின் தமிழ்நாடு விரோதப் போக்கைக் கண்டித்து இப்போதுள்ள காவிரி ஆணையத்தைக் கலைத்துவிட்டு, நடுநிலை தவறாத அதிகாரி தலைமையில், காவிரி நீரைப் பிரித்து வழங்கும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட புதிய மேலாண்மை ஆணையம் அமைத்திட இந்திய அரசை வலியுறுத்தும் வெகுமக்கள் போராட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in