ஒரு மகன் போனாலும் ஓராயிரம் மகன்கள், மகள்கள் உள்ளனர்... சைதை துரைசாமி உருக்கம்!

வெற்றி துரைசாமி, சைதை துரைசாமி
வெற்றி துரைசாமி, சைதை துரைசாமி
Updated on
2 min read

எனக்கு ஒரு மகன் போனாலும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் என அரசு பதவிகளில் இருக்கும் ஓராயிரம் மகன்கள், மகள்கள் பக்கப்பலமாக இருக்கிறார்கள் என்று சைதை துரைசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

வெற்றி துரைசாமி
வெற்றி துரைசாமி

இமாச்சல் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் நேற்று தனி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வெற்றி துரைசாமி உடல் வைக்கப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் , அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

அதனைத் தொடர்ந்து இரவு 9 மணியளவில் கண்ணம்மாபேட்டையில் உள்ள மயானத்திற்கு வெற்றி துரைசாமியின் உடல் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், தனது மகனை தகனம் செய்த பிறகு மயானத்தில் சைதை துரைசாமி உருக்கமாக பேசினார்.

“இந்தியா முழுக்க, தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசுப் பணியில், அரசின் உயர் பதவியில் ஐஏஎஸ், ஐஆர்எஸ் பணிபுரியும் வாய்ப்பை பெற்ற அனைத்து மகன்களும், மகள்களும் இங்கு வந்துள்ளனர். எனது ஒரு மகன் போனாலும் எனக்கு பக்கப்பலமாக என்னுடைய இத்தனை மகன்கள், மகள்கள் இருக்கின்றார்கள் என்ற மனவலிமையோடு நான் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சைதை துரைசாமி
சைதை துரைசாமி

சக மனிதனுக்காக வாழ வேண்டும். சமூக நீதி என்பது பொருளாதாரத்தால் தடைபட்டு விடக் கூடாது. அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களையும் அரசுப் பணியில் அமர வைப்பதும் எனது லட்சியம். இதனை எனது மகன் மரணத்தில் நான் உறுதி ஏற்கிறேன். அதை நோக்கி பயணித்து, சக மனிதனுக்காக வாழ்ந்து, என மகனின் ஆன்மா சாந்தியடையும் வகையில் அந்த சேவையை அபிவிருத்தி செய்வேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

நான் மனம் கலங்க மாட்டேன். காரணம், இத்தனை மகன்களை, மகள்களை நான் பெற்றுள்ளேன். அவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். அதனால் இன்னும் வலிமையோடு பயணிப்பேன். அதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். அந்த பாதையில் நான் பயணிப்பேன் என சூளுரைக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

இமாச்சல் பிரதேசம் பயணத்துக்கு போக வேண்டாம் என தன் மகனிடம் சொன்னதாகவும், ஆனால், அவர் 'இதுவே கடைசி' என சொல்லி விட்டுச் சென்றதாகவும் சைதை துரைசாமி கண்ணீருடன் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in