
நாடு முழுதும் உள்ள ஓப்போ மொபைல்ஸ் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்கள் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில், வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஓப்போ மொபைல்ஸ் தலைமையிடம் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது.
இந்தியாவில் பெரும்பாலும் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளின் நிறுவனங்களே செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனங்களாகத் திகழ்கின்றன. ஓப்போ மற்றும் பாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்கள், நாடு முழுதும் கிளை அமைத்துப் பல ஆண்டுகளாக வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்தப் புகாரின் அடிப்படையில், இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை கிரிப்டோ கரன்சிகளாக மாற்றி முதலீடு செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதால், இந்த நிறுவனங்களும் வருமானத்தை மறைத்து முதலீடு செய்துள்ளனவா? என வருமானவரித் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனையின் முடிவில்தான், எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்பது குறித்து முழு விவரங்கள் தெரியவரும் என வருமானவரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.