அகில இந்திய வானொலிக்கு அபாயச் சங்கு!

கேள்விக்குறியாக்கப்படும் கலைஞர்களின் எதிர்காலம்
அகில இந்திய வானொலிக்கு அபாயச் சங்கு!

பொதுத் துறை நிறுவனங்களைத் தொடர்ந்து தனியாருக்கு தாரை வார்ப்பதாக மத்திய அரசுக்கு எதிராக, கடந்த சில மாதங்களாகவே கண்டனக்குரல்கள் ஒலித்துவருகின்றன. இப்போது, பொதுமக்களுக்கு தகவல்களைக் கடத்தும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட அகில இந்திய வானொலி நிலையங்களையும் வருவாய் வாய்ப்பாக மட்டுமே மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரச்சார் பாரதி நிர்வாகம் அணுகத் தொடங்கியுள்ளது. இது கலைஞர்கள், படைப்பாளிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இணைய உலகின் வேகத்தில் இருக்கிறோம். அதற்கு முந்தைய காலத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள்தான் தகவல்களை, செய்திகளை அறிந்துகொள்ளும் நல்வாய்ப்பாக இருந்தன. அதற்கும் முந்தைய காலத்தில் வானொலிகள்தான் மக்களுக்குச் செய்திகளையும், அரசின் அறிவிப்புகளையும் வெளிப்படுத்தும் ஊடகமாக இருந்தது. பொதுமக்களுக்கும், அரசுக்கும் இடையேயான பாலமாக வானொலி நிலையங்கள் தான் இருந்தன. இப்போதும்கூட பயணத்தின் போதும், இல்லங்களிலும், கடைகளிலும் வானொலி கேட்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடியே, தன் ‘மனதின் குரல்’ என்னும் நிகழ்ச்சியை வானொலியின் ஊடாகவே பேசிவருகிறார். வானொலிகள் மக்களுக்குத் தகவல்களை, செய்திகளைக் கடத்துவதோடு மட்டும் இல்லாமல், ஓசையே இன்றி இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கலைஞர்களையும், படைப்பாளிகளையும் வாழ வைத்துக்கொண்டும் இருந்தது.

கிராமியப் பாடகர் தொடங்கி, மேளம், நாகஸ்வரம், வீணை வாசிப்பாளர் என பலருக்கும் அகில இந்திய வானொலியில் தொடர்ந்து நிகழ்ச்சி வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது. இதேபோல் இளைஞர்களுக்காக அந்த, அந்த வானொலி நிலையங்களில் ‘இளைய பாரதம்’ என்னும் நிகழ்ச்சி தொடங்கி, படைப்பாளர்கள் அறிமுகம்வரை தொடர்ந்து பல ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை தயாரிக்கும் வகையில், அனைத்து வானொலி நிலையங்களிலும் நிகழ்ச்சித் தயாரிப்புக் கூடங்களும் இயங்கி வருகின்றன. இந்த நிகழ்வுகளில் பங்கேற்போருக்கு சன்மானம், பயணப்படியும் வழங்கப்பட்டு வந்தது. இது நலிவுற்ற நிலையில் இருக்கும் கலைஞர்களுக்கு பொருளாதாரரீதியில் சிறு ஆறுதலாக இருந்தது.

ஆனால் இப்போது, பிரச்சார் பாரதி நிர்வாகம் வானொலி நிலையங்களை பொருளீட்டும் மையமாக மட்டுமே அணுகத் தொடங்கியுள்ளது. இதனால் வாரம் முழுவதும் இதுவரை தயாரித்துவந்த நிகழ்ச்சிகளை ஒருநாள் மட்டுமே தயாரித்துக்கொள்ள சென்னையைத் தவிர்த்து பிற ஊர்களில் இயங்கும் வானொலி நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வானொலி நிலையங்கள், உள்ளூர் கலைஞர்களை வைத்து இனி முன்புபோல் அதிக நிகழ்ச்சிகளை தயாரிக்க முடியாது.

பிரச்சார் பாரதியின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். அதன் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘சென்னை, கோவை, தருமபுரி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், புதுச்சேரி உள்ளிட்டு நாடு முழுவதுமுள்ள அகில இந்திய வானொலி நிலையங்கள் 23 மொழிகளிலும் 179 வட்டார மொழிகளிலும் நிகழ்ச்சிகளை படைத்தளித்து வருகின்றன.

நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, நாடகம் என்பதான கலைவடிவங்களோடு விவசாயம், கல்வி, பொது சுகாதாரம், அறிவியல், இலக்கியம், தொழிலாளர் நலன் சார்ந்த நிகழ்வுகளையும், பண்பலை வழியாக திரையிசைப் பாடல்களையும் ஒலிபரப்பி வருகின்றன. இவற்றுடன், பிரதமரின் மாதாந்திர உரையையும், மத்திய மாநில அரசுகளின் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் பெரும்பணியையும் ஆற்றிவருகின்றன. இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள், குரல் வடிவ நாடகக் கலைஞர்கள், கர்நாடக இசைக்கலைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு தமிழகத்தின் அனைத்து வானொலி நிலையங்களும் உரிய வெகுமதியை வழங்குகின்றன. ஆனால் இந்த வெகுமதியை விடவும் வானொலி நிலையத்தில் பங்கேற்பதால் கிடைக்கும் கவுரவத்தையும், அதன் மூலம் அரசின் பிற பிரச்சார வடிவங்களில் கிடைக்கும் வாய்ப்புகளையுமே இவர்கள் பெரிதாக மதிக்கின்றனர்.


இந்நிலையில், சென்ற ஆண்டு கரோனா ஊரடங்குக் காலத்தில் நிகழ்ச்சிகள் தயாரிக்க முதன்முதலாக தடை வந்தது. இந்தாண்டு தளர்வுகள் வந்தபின் நிகழ்ச்சிகள் வழக்கம்போல் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்படும் என கலைஞர்கள் உள்ளிட்டோரும், நிகழ்ச்சி தயாரிப்பதனால் தங்களுக்கு வேலையும் ஊதியமும் கிடைக்கும் என தொகுப்பூதிய பணியாளர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், பிரச்சார் பாரதி நிர்வாகம் அனைத்து வானொலி நிலையங்களுக்கும் நிகழ்ச்சி தயாரிக்க கொடுக்கப்படும் தொகையினை 50 சதவீதத்திற்கும் குறைவாக வெட்டிச் சுருக்கியது. அடுத்த பேரிடியாக அனைத்து வானொலி நிலையங்களும் எல்லா நாட்களும் நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்கு பதிலாக வாரத்திற்கு ஒருநாள் மட்டும் தயாரிப்பது, மற்ற நாட்களில் சென்னை வானொலி நிலையத்திலிருந்து நிகழ்ச்சிகளை வாங்கி ஒலிபரப்புவது என்கிற திட்டம் 2021 அக்டோபர் முதல் அமலாகக்கூடும் என்கிற தகவல் கசிந்துள்ளது.

இதனால் அந்தந்த வட்டார மக்களின் திறன்களும் தேவைகளும் முற்றாக புறக்கணிக்கப்படும். கும்மி, வில்லுப்பாட்டு, கதைப்பாட்டு, ஒப்பாரி என மரபார்ந்த கலைகளுக்கான ஆதரவும் மறுக்கப்படும். மட்டுமன்றி, நிகழ்ச்சி தயாரிப்பில் உதவிவரும் தொகுப்பூதிய பணியாளர்கள் சுமார் 1000 பேரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும். புதுச்சேரியின் பிரஞ்சிந்திய கலாச்சாரத்தின் ஒருபகுதியாக வாரந்தோறும் இடம்பெறும் பிரஞ்சுமொழி நிகழ்ச்சியும், புதுச்சேரி சட்டசபையின் நடவடிக்கைகளும் புறக்கணிப்பிற்குள்ளாகும்.


அரசியல் சாசனத்தின் வழி நின்று நாட்டின் கலை இலக்கியம் பண்பாட்டு நடவடிக்கைகளின் ஊடாக மக்களுக்கும் அரசிற்கும் இடையே தகவல் பரிமாற்றச் சேவையாற்றும் இவ்வானொலி நிலையங்களை வர்த்தக நோக்கில் பார்ப்பது ஏற்புடையதல்ல. இத்தனைக்கும் ஊழியர் பற்றாக்குறை பெரிதாக இருந்துவரும் இக்காலத்திலும் வானொலி நிலையங்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட விளம்பர இலக்கினை நிறைவேற்றி வருவதாகவும் தெரிகிறது. பன்மைத்தன்மையே இந்திய நாட்டின் அடையாளம். வட்டார மொழி வடிவம், மரபுசார் கலைகள், மண்சார் இலக்கியம், அந்தந்தப் பகுதிசார் விவசாயம் ஆகியவற்றுக்கு இதுகாறும் அளித்துவந்த ஆதரவினை நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி விலக்கிக்கொள்ளும் முடிவினை பிரச்சார் பாரதி நிர்வாகம் உடனடியாக மறுபரிசீலனை செய்திடல் வேண்டும்’

என தெரிவித்துள்ளனர்.

இதேபோல் அகில இந்திய வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்படும் விவசாய நிகழ்ச்சிகளுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் விவசாயிகளுக்கும் இதன்மூலம் வருவாய் கிடைத்துவந்தது. இனி வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே சொந்தமாக நிகழ்ச்சிகளைத் தயாரிக்க முடியும் என்னும் கட்டுப்பாட்டினால் ஏராளமான நிகழ்ச்சிகள் நிறுத்தப்படும். இதேபோல் தமிழகத்திலேயே நாகர்கோவில் அகில இந்திய வானொலிக்குத்தான் தான் ‘கிசான் வானி’ என்னும் தகுதி வழங்கியுள்ளனர்.

இதன் மூலம் ஏராளமான விவசாய நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி வந்தன. அதற்கான நிதியும் நிறுத்தப்பட்டுவிட்டதால் விவசாயிகளை அகில இந்திய வானொலியின் ஒலிப்பதிவுக்கும், நேரலை நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பது நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளை நேரில் வானொலி நிலையத்துக்கு அழைத்தால் சன்மானம் கொடுக்க வேண்டும் என்பதால், அவர்கள் இருக்கும் இடத்துக்குப் போய் குரல் பதிவு செய்யும் நுட்பத்துக்கும் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மாறியுள்ளனர்.

அகில இந்திய வானொலியின் பிராந்தியங்கள் நிகழ்வுகளைக் குறைத்துக் கொள்வது பொருளாதார ரீதியாக மட்டுமல்லாது, கருத்தியல் ரீதியாகவும் பெரும் பின்னடவை ஏற்படுத்தும். பிரச்சார் பாரதி நிர்வாகம் இந்த முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே வானொலி நேயர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in