
பி.எம்.சுதிர்
ரஜினி, கமல், நயன்தாரா, இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என கோலிவுட் பிரபலங்கள் இணைந்து ஒரு செல்ஃபி எடுத்தால் எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு செல்ஃபி படத்தைத்தான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள்.
ஹாலிவுட் திரையுலகில் பிரபலங்களாகத் திகழும் பிராட்லி கூப்பர், மெரில் ஸ்டிரீப் , பிராட் பிட், ஜெனிஃபர் லாரன்ஸ், கெவின் ஸ்பேசி உள்ளிட்ட பலரும் குவிந்திருக்கும் இந்தப் படம் 2014-ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின்போது எடுக்கப்பட்டது. பிரபலங்கள் பலரும் இருந்ததாலேயே சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற இந்த செல்ஃபி, ட்விட்டர் தளத்தில் 30 லட்சம் முறை ரீ ட்வீட் செய்யப்பட்டு அதிக அளவில் பகிரப்பட்ட புகைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
சர்வதேச அளவில் நடக்கும் திரையுலக விழாக்களில் முக்கியமான விழாவாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா. ஹாலிவுட்டில் சிறந்து விளங்கும் படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி சிறப்பிக்கும் நோக்கில் ஆஸ்கர் விருதுகளை வழங்க 1927-ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. இதற்காக 1927-ல், ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. முதலில் இந்த அமைப்பில் 36 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த உறுப்பினர்களின் வழிகாட்டுதலின்பேரில் 1929-ம் ஆண்டு மே 16-ம் தேதி, முதல் முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.