பேசும் படம் - 21: விடுதலை வெளிச்சத்தில்...

பேசும் படம் - 21: விடுதலை வெளிச்சத்தில்...

தென் ஆப்பிரிக்க மக்களால் மறக்க முடியாத நாள் 11-02-1990. அந்நாட்டு மக்களுக்காகவும், நிறவெறிக்கு எதிராகவும் 27 ஆண்டுகாலம் கொடுஞ்சிறையில் இருந்த நெல்சன் மண்டேலா, விடுதலையாகி மக்கள் முன் மீண்டும் தோன்றிய நாள் அது. மண்டேலாவுக்குக் கிடைத்ததைப் போல் தங்களுக்கும் விரைவில் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை தென் ஆப்பிரிக்காவின் கறுப்பின மக்களுக்கு ஏற்பட்ட நாள் என்றும் அதைச் சொல்லலாம்.

மண்டேலா சிறையில் அடைபட்டிருந்த காலகட்டத்தில் அந்நாட்டின் ஒரு தலைமுறையே அவரை நேரில் பார்க்கவில்லை. தங்களுக்காக ஒரு தலைவன் சிறையில் இருந்தபடியே போராடிக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடன் அவரது வரவுக்காக அவர்கள் காத்திருந்தனர். சிறைச்சாலையின் கடுமையான விதிகளால், மண்டேலாவின் புகைப்படங்கள்கூட அவ்வளவாக வெளிவராமல் இருந்த நிலையில், அவர் விடுதலையாவதைக் கேள்விப்பட்டதும் ஆயிரக்கணக்கானோர் அவரைப் பார்க்க குவிந்தனர். பொதுமக்கள் மட்டுமின்றி பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரைப் படமெடுக்கும் ஆசையில் சர்வதேச பத்திரிகையாளர்களும் தென் ஆப்பிரிக்காவில் குவிந்தனர். அப்படி வந்து சேர்ந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஏலன் டன்னென்பாம் எடுத்த புகைப்படத்தைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.

பெருந்திரளான மக்கள் அளித்த இத்தகைய வரவேற்புக்கு மண்டேலா பொருத்தமானவர் என்பது அவரது வரலாற்றைப் பார்த்தாலே புரியும்.

1918-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்த நெல்சன் மண்டேலா, தனது இருபத்தொன்றாவது வயதிலேயே கறுப்பின இளைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களை நடத்தினார். 1941-ல், சட்டக்கல்வியை முடித்தார். 1943-ல், தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்த மண்டேலா, பின்னர் அதன் தலைவரானார். வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். 1948-ல், தென் ஆப்பிரிக்க அரசு, கறுப்பின மக்களுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இந்தக் காலகட்டத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கறுப்பின மக்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கினார் மண்டேலா.

மண்டேலாவின் தொடர் போராட்டங்கள் மற்றும் ஆட்சிக்கு எதிராக அவர் செய்துவந்த கலகங்களால் எரிச்சலுற்ற வெள்ளையர் அரசு, 1956-ல், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. 4 ஆண்டுகள் நடந்த விசாரணைக்குப் பிறகு மண்டேலா விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் அடங்கி நடப்பார் என அந்நாட்டு அரசு கருதியது. ஆனால், மண்டேலாவோ முன்பைவிடத் தீவிரமானார். அதுவரை அமைதியான முறையில் போராடி வந்த மண்டேலா, ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கினார். இதனால் தென் ஆப்பிரிக்காவில் விடுதலை போராட்டங்கள் தீவிரமடைய, 1964-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டார் மண்டேலா. இம்முறை அவரது சிறை வாழ்க்கை மிக நீண்டதாக இருந்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மண்டேலா, 27 ஆண்டுகள் சிறையில்  இருக்கவேண்டி இருந்தது. உலகிலேயே எந்தச் சர்வதேச தலைவரும் இந்த அளவுக்கு நீண்ட நாட்களை சிறையில் கழித்ததில்லை.

கொடுஞ்சிறையில் தள்ளப்பட்டாலும் அவரது போராட்ட குணம் குறையவில்லை. சிறையில் இருந்துகொண்டே கறுப்பின மக்களின் போராட்டத்தை வழி நடத்தினார்.

“மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்” என்ற அரசின் நிபந்தனையையும் அவர் ஏற்கவில்லை. அதனால், 1988-ல், காசநோயால் பாதிக்கப்பட்டபோதும் மண்டேலா விடுதலை செய்யப்படவில்லை.

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்று  பல்வேறு  உலக நாடுகளும் தென் ஆப்பிரிக்க அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. அந்நாட்டுக்கு எதிராகப் பல்வேறு நாடுகளும் தடைகளை விதித்தன. இறுதியில் 1990-ம் ஆண்டு மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து 1994-ல், தென் ஆப்பிரிக்காவும் விடுதலை பெற, அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றார் மண்டேலா. எனினும் புகழின் உச்சியில் இருந்த நேரத்திலேயே 1999-ல், அதிபர் பதவியில் இருந்து விலகினார் மண்டேலா. மகாத்மா காந்திக்கு அடுத்ததாக உலகெங்கிலும் உள்ள மக்களைக் கவர்ந்த மிகப்பெரிய தலைவராக விளங்கிய மண்டேலா, தனது 95-வது வயதில் காலமானார்

ஏலன் டன்னென்பாம்

1945-ல், நியூஜெர்ஸியில் உள்ள பசைக் என்ற ஊரில் ஏலன் டன்னென்பாம் (Allan Tannenbaum) பிறந்தார். சிறுவயதில் ‘தி டர்கம்’ கல்லூரிப் பத்திரிகையில் வேலை பார்த்த ஏலன், பின்னர் சோஹோ வீக்லி நியூஸ் (SoHo Weekly News) என்ற வாரப் பத்திரிகையில் தலைமை புகைப்படக்காரராகவும், போட்டோ எடிட்டராகவும் பணியாற்றினார். கலை, அரசியல், இசை உட்பட பல்வேறு துறை சார்ந்த படங்களை இவர் எடுத்துள்ளார். தற்போது நியூயார்க் நகரில்  வாழ்ந்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in