
பி.எம்.சுதிர்
இரண்டாம் உலகப் போரின்போது இவோ ஜிமாவில் (Iwo Jima) உள்ள சுரிபாச்சி மலையின் உச்சியில் அமெரிக்க கடற்படை வீரர்கள் அந்நாட்டின் கொடியை ஏற்றும்போது எடுக்கப்பட்ட படம் இது. அமெரிக்க புகைப்படக்காரரான ஜோசப் ரோசென்தால் 1945-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி இப்படத்தை எடுத்தார்.
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவுக்குத் தென்கிழக்கே 1,046 கிலோமீட்டர் தூரத்தில் சிறு புள்ளிபோல் அமைந்துள்ள தீவுதான் இவோ ஜிமா. இதன் மொத்தப் பரப்பளவே 21 சதுர கிலோமீட்டர்தான். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானைத் தாக்க, அமெரிக்காவின் விமானப்படைகள் நீண்டதூரம் பறந்து வரவேண்டி இருந்தது. இந்நிலையில் ஜப்பானுக்கு அருகில் உள்ள இந்தத் தீவைக் கைப்பற்றினால், அங்கு தங்கள் விமானப் படைத்தளத்தை அமைத்து ஜப்பான் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க படைகள் திட்டமிட்டன.
இதன்படி, எரிமலைகளைக் கொண்ட இந்தத் தீவை 1945-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி அமெரிக்க கடற்படையின் 2 பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் வீரர்கள் முற்றுகையிட்டனர். அமெரிக்கர்கள் படையெடுத்து வருவார்கள் என்று ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததால் ஜப்பானும் ஆயிரக்கணக்கான வீரர்களை இந்தத் தீவில் குவித்திருந்தது. இதைத்தொடர்ந்து இரு படைகளுக்கும் இடையே கடுமையான யுத்தம் தொடங்கியது.