தமிழ்நாட்டில் விதிகளை மீறி இயங்கும் 32 சுங்கச்சாவடிகள்... அகற்ற லாரி உரிமையாளர் சம்மேளனம் வேண்டுகோள்!

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளைக் கடந்து காலாவதியாகி விட்ட 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மக்களவை தேர்தல் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது.

இதன்படி இந்தியா முழுவதும் உள்ள நான்கு வழிச்சாலை, ஆறு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை என புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி அமைக்கப்பட்ட ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளைத் தொடர்ந்து பராமரிக்கும் வகையில், இந்த சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 381 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை சுங்கச்சாவடி கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

இந்த சுங்கச்சாவடிகளில் மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென கட்டண உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. 15 ஆண்டுகளைக் கடந்த சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்பது மத்திய அரசின் விதியாகும்.

ஆனால், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 48 சுங்கச் சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகள் 15 ஆண்டுகளைக் கடந்து காலாவதியாகி விட்டதாக கூறப்படுகிறது. மத்திய நெடுஞ்சாலைத்துறை விதிகளின் படி, இந்த சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். ஆனால், இவற்றை மூடாமல் விதிகளை மீறி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதற்குப் பதிலாக மேலும் பல்வேறு இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆளுங்கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில், தமிழ்நாட்டில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக சேலத்தில் விதிகளை மீறி 60 கி.மீ எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ள 2 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர் தனராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in