
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ராஜா ராணி2’ சீரியலின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில், சந்தியா கதாபாத்திரத்தில் நடிகை ஆல்யா நடித்து வந்தார். அவர் விலகிய பிறகு அவருக்குப் பதிலாக ரியா நடித்து வந்தார். இந்த சீரியல் மூலம்தான் அவர் அறிமுகம் எனும்போது இப்போது அவரும் திடீரென விலகியுள்ளார். இதுகுறித்து, அவரிடம் பேசினோம்.
‘ராஜா ராணி2’ போன்ற பிரபல சீரியலில் இருந்து திடீரென விலக என்ன காரணம்?
‘ராஜா ராணி2’ சீரியல் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. சந்தியா கதாபாத்திரத்தில் நான் உள்ளே வந்ததுமே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மெல்ல மெல்ல எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. அவர்களும் என்னை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், இந்த சீரியலில் நான் கமிட் ஆகத் தொடங்கியது, எனக்கு டேட், அதிகமான இரவு நேர படப்பிடிப்பு என வேலை எனக்கான நேரம் என்பதே இல்லாமல் போனது.
எனக்கும் முதல் சீரியல் என்பதால் எப்படி சமாளிக்க வேண்டும் என்பதும் தெரியாமல் இருந்தது. வீட்டில் உள்ளவர்களுடன் சரியாகப் பேச முடியவில்லை, என் பெட்டுடன் நேரம் செலவழிக்க முடியாமல் போனது என இப்படியே போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள், இரண்டு நாட்கள் என்றால் பரவாயில்லை. இப்படியே தொடர்ந்தால் கஷ்டம் எனத் தோன்றியது. அதனால்தான், சீரியலில் இருந்து விலகலாம் என்று முடிவெடுத்து வந்துவிட்டேன்.
சீரியல் தரப்பில் என்ன சொன்னார்கள்?
நான் இதுபோன்ற முடிவெடுத்து, விலகப் போகிறேன் என்று சொன்னதும் அவர்கள் “சரி” என்றுதான் சொன்னார்கள். கிட்டத்தட்ட ஒரு வருடம் சந்தியாவாக நடித்துள்ளேன். ஆரம்பத்தில் என்னை அணுகியபோது போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்ற உயரம், உடல்வாகு என்று சொல்லிதான் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். ஒத்துக்கொண்டு உள்ளே போனபோது, செட்டிலே சிலருக்கு ஆல்யாதான் ‘சந்தியா’ என்ற பேச்சு இருந்தது. இருந்தாலும் 80 சதவீதம் பேர் அங்கு என்னை ஏற்றுக்கொண்டதால் ஏன் மீதம் 20 சதவீதம் பேர் வருத்தப்பட வேண்டும் என்று நினைத்தேன். அதுபோல, பார்வையாளர்களுக்கும் என்னைப் பிடித்திருந்தது. அப்படி இருக்கும்போது நான் போகிறேன் என சொன்னதும் உடனே அவர்கள் சம்மதித்தது கொஞ்சம் வருத்தமாகதான் இருந்தது. இப்போது, ‘ராஜா ராணி2’ சீரியலை மதிய ஸ்லாட்டிற்கு மாற்றுவதாக சொல்லி வருகிறார்கள்.
சீரியலில் இருந்து விலகிவிட்டோம் என வருத்தம் இருக்கிறதா?
ஆமாம்! ஏனெனில், மக்கள் என்னை இத்தனை நாட்களாக சந்தியாவாகதான் பார்த்திருக்கிறார்கள். அது மிஸ் ஆகிறது எனும்போது வருத்தம்தான். இத்தனை நாட்கள் கூட்டமாக இருந்து திடீரென அது இல்லாமல் இருக்கிறது. என்னை நானே தனிமைப் படுத்திக்கொண்டு இருக்கிறேன். இருந்தாலும், எனக்கு ஓகேதான். இதுவும் கடந்து போகும்.
இப்போது என்ன திட்டம்?
‘ராஜா ராணி2’ சீரியலின்போது எனக்கான நேரம் இல்லை என்று சொல்லி இருந்தேன் இல்லையா? இப்போது ஸ்கின் கேர், ஜிம் என எனக்கான நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறேன். அடுத்து சினிமாவோ சீரியலோ நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.