‘சைபர் க்ரைம் ஜாக்கிரதை’ - சவடால் பேர்வழிகளுக்கு சவுக்கடி கொடுத்த சமீரா - ஷெரிஃப் ஜோடி!

‘சைபர் க்ரைம் ஜாக்கிரதை’ - சவடால் பேர்வழிகளுக்கு சவுக்கடி கொடுத்த சமீரா - ஷெரிஃப் ஜோடி!

தங்கள் குழந்தையின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வது குறித்து அநாகரிகமாகக் கமென்ட் செய்த நபர்களுக்கு சமீராவும் அவரது கணவர் ஷெரிஃபும் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

‘பகல் நிலவு’ சீரியல் மூலம் பிரபலமானவர்கள் நடிகர் ஷெரிஃபும், நடிகை சமீராவும். இருவரும் காதலித்துவந்த நிலையில் 2019-ல் இவர்களுக்குத் திருமணம் நடந்தது. இப்போது இவர்களுக்கு அர்ஹான் என்ற குழந்தையும் உள்ளது.

இருவரும் தங்களது குழந்தையின் மகிழ்ச்சியான தருணங்களின் புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றைப் பகிர்ந்துவருகின்றனர். நல்ல கமென்டுகளைப் போலவே, வழக்கம் போல நெகட்டிவான கமென்டுகளையும் சில நெட்டிசன்கள் பகிர்ந்து வந்திருக்கின்றனர். ‘குழந்தையை வைத்து சம்பாதிக்கிறீர்களா? உங்களுக்கு நடிக்க வாய்ப்பு இல்லையா?’ என்கிற ரீதியில் நெகட்டிவான பல விமர்சனங்களும் வந்திருக்கின்றன.

இது போன்ற நெகட்டிவ் கமென்டுகளுக்கு ஷெரிஃப் தற்போது பதிலளித்துள்ளார். ‘உங்களது நெகட்டிவ் கமென்டுகளை நாங்கள் பார்க்காமல் இல்லை. இப்படியெல்லாம் கமென்ட் கொடுக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் பதில் கொடுக்கும் அளவுக்கு நீங்கள் எங்களுக்கு முக்கியமானவர்கள் கிடையாது. நீங்கள் இப்படியெல்லாம் எங்களைப் பேசுவதால் உங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை. உங்கள் ஒவ்வொருவரின் கமென்ட்டையும் நாங்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துள்ளோம். இந்த ஒரு முறை மட்டும் உங்களுக்கு நேரம் கொடுக்கிறோம். நீங்களே எங்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு விலகிவிடுங்கள். இல்லை என்றால் சைபர் க்ரைமில் உங்கள் ஒவ்வொருவர் மீதும் புகார் கொடுப்போம்’ என ஷெரிஃப் கூறியுள்ளார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீராவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ‘நாம் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுக்கத்தான் இங்கு இருக்கிறோம். அதை விடுத்து தேவையில்லாமல் பேசினால் முன்பு போல நான் காதில் வாங்காமல் இருக்க மாட்டேன். இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்’ என எச்சரித்திருப்பதுடன், சைபர் க்ரைமின் இன்ஸ்டாகிராம் ஹேண்டிலையும் டேக் செய்துள்ளார் சமீரா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in