`மாஃபியா கும்பலால் என் உயிருக்கு ஆபத்து'- விஜே சித்ராவின் கணவர் அதிர்ச்சி புகார்

`மாஃபியா கும்பலால் என் உயிருக்கு ஆபத்து'- விஜே சித்ராவின் கணவர் அதிர்ச்சி புகார்
newuser

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். "தனது மனைவியை தற்கொலைக்கு தூண்டிய மாஃபியா கும்பலால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது" என்ற அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார்.

சின்னத்திரையில் பிரபல நாடகங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சித்ரா காமராஜ் (எ) வி.ஜே.சித்ரா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த்தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ஹேம்ந்த் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்த் நேற்று முன்தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தனது மனைவியான சித்ராவும், தானும் மிகுந்த அன்னியோன்யத்துடன் இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது சின்னத்திரை பிரபலங்கள் அனைவருக்கும் தெரியும். மேலும், தனது மனைவி தற்கொலை செய்து கொண்டபோதே நானும் என் வாழ்வை முடித்துக்கொள்ள எண்ணியதாகவும், ஆனால் என் மனைவியை நான் தான் தற்கொலைக்கு தூண்டியதாக என் மீது சேற்றை வாரி இரைத்தவர்கள் முன் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கவே நான் இன்னும் உயிரோடு இருப்பதாகவும் ஹேமந்த் தெரிவித்துள்ளார். மேலும், தனது மனைவியின் தற்கொலைக்குப் பின்னால் பண பலமும், அரசியல் பலமும் கொண்ட மாஃபியா கும்பல் இருப்பதும் பலருக்கு தெரிந்த உண்மை எனினும், அவர்களுக்கு பயந்து அதை வெளியில் கூற அனைவரும் தயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி அவர்களின் பண பலத்துக்கு முன்னால் என்னை போன்ற சாதாரண மனிதனால் எதுவும் செய்ய இயலாது எனவும், அப்படி செய்தாலும் என் மனைவி திரும்பக் கிடைக்கப்போவதில்லை என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளதாக

அவர் குறிப்பிட்டுள்ளார். என் மீது சுமத்தப்பட்டுள்ள பழியை போக்கவே தற்போது வாழ்ந்து வருவதாகவும், சுப்பாராவ், சரோஜா ராவ், மதுசூதனன், சாய் வெங்கடேஷ், யாமினி, இம்மானுவேல் ராஜா உள்ளிட்ட ஒரு கும்பல் என் மூலம் தனது மனைவி சித்ராவின் தற்கொலைக்கு காரணமாக இருந்த பணபலம் படைத்த மாஃபியா கும்பலை தொடர்புகொண்டு அவர்களிடம் இருந்து பணம் பெற முயல்வதாகவும், இச்செயலுக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மற்றொருபுறம் தனது மனைவியின் தற்கொலைக்கு காரணமான கும்பலும் தங்கள் பெயரை வெளியில் கூறினால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவோம் என மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இரு தரப்பினரும் மாறி மாறி என்னை மிரட்டி வரும் நிலையில் எனது உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ள அவர், தன் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கும் வரை நான் உயிரோடு வாழ விரும்புவதால் உயிருக்கு பயந்து தன் வீட்டை விட்டு வெளியேறி வேறொரு இடத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இல்லையெனில் என் சொந்த செலவில் போலீஸ் பாதுகாப்பு வழங்கி தனது உயிரை காப்பாற்றுமாறு புகாரின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் முன் என் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், தனது மனைவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்தவர்கள்தான் என் இறப்புக்கு காரணமாக இருப்பார்கள் என்பதை இப்புகார் வாயிலாக தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in