கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறை

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறை

மதுரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு ஆயுள் முழுவதும் சிறைத் தண்டனையும், மேலும் 8 பேருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற மாணவர், நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண்ணும் நட்பாக பழகினார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. மகனை பெற்றோர் தேட ஆரம்பித்தனர். இந்நிலையில், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தலை மற்றும் நாக்கு துண்டிக்கப்பட்டு கொடூரமாக கோல்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு ப்ரியா தற்கொலை செய்துக் கொண்டார். இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே, கடந்த 2015ம் ஆண்டு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் யுவராஜ் சரணடைந்தார். இந்த வழக்கில் மேலும் 16 பேரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர். சாதி ஆணவப் படுகொலையான இந்த சம்பவம் தமிழகத்தை அதிரவைத்தது.

கோல்ராஜ்
கோல்ராஜ்

இந்த வழக்கு நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி அவரது தாயார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை கடந்த 2019 மே 5ம் தேதி முதல் மதுரை எஸ்.சி.எஸ்.டி. சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையில், 116 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கின் விசாரணை முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது.

கோல்ராஜ் சடலம் கிடந்த தண்டவாளம்
கோல்ராஜ் சடலம் கிடந்த தண்டவாளம்

இதையடுத்து, கோகுல் ராஜ் கொலை வழக்கில் கடந்த 5ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி சம்பத்குமார், யுவராஜ், யுவராஜின் கார் ஓட்டுநர் அருண், குமார் என்கின்ற சிவக்குமார், சதீஷ்குமார், ரகு என்கின்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என அறிவித்தார். இந்த வழக்கில் செல்வராஜ், சந்திரசேகர், பிரபு, ஸ்ரீதர், சுரேஷ் ஆகிய 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் 10 பேர் மீதான தண்டனை விவரம் மார்ச் 8ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி கூறியிருந்தார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் உறவினர்கள்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் உறவினர்கள். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

அதன்படி, யுவராஜ் மற்றும் 2வது குற்றவாளி யுவராஜின் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு ஆயுள் முழுவதும் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ஆயுள் தண்டனையுடன் பிரபு, கிரிதர் ஆகியோருக்கு கூடுதலாக 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குமார், சதீஸ்குமார், ஸ்ரீதர், ரஞ்சித் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையும், மேலும் சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் கூடுதலாக வழங்கி தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி சம்பத்குமார்.

தீர்ப்பை கேட்டு நீதிமன்ற வளாகத்தில் பட்டாசு வெடித்த மக்கள்
தீர்ப்பை கேட்டு நீதிமன்ற வளாகத்தில் பட்டாசு வெடித்த மக்கள்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை விவரத்தை கேட்பதற்காக கோகுல்ராஜின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். மேலும், யுவராஜ் உள்பட 2 பேருக்கு ஆயுள் முழுவதும் சிறைத் தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை கேட்டு அங்கிருந்தவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in