நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலியானார். தமிழகத்தில் பல்வேறு வகையான காய்ச்சல்களும் பரவிவரும் நிலையில் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் வெங்கடேசப்புரியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி சரோஜா(53) இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த இரு மாதங்களாக நுரையீரல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்த சரோஜா, கடந்த 19 ம் தேதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த சரோஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சுகாதாரப்பணியாளர்கள் வெங்கடேசப்புரி பகுதியில் மருந்து தெளித்து, மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.
பன்றிக் காய்ச்சல் நோயினால் பெண் உயிரிழந்த சம்பவம் மல்லசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.