7 பேர் விடுதலை ஆவணங்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் எப்போது அனுப்பினார்?

பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
7 பேர் விடுதலை ஆவணங்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் எப்போது அனுப்பினார்?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய ஆவணங்களை ஜனாதிபதிக்கு, ஆளுநர் அனுப்பியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முந்தைய அதிமுக அரசு, அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால், அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவெடுக்காமல் இருந்ததால், தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய வேண்டும் எனவும், அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் இருக்கும் ஆளுநரின் செயல்பாடு, அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், ஆயுள் கைதியை எப்படி முன்கூட்டி விடுதலை செய்ய முடியும் என்றும் அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க வேண்டியது ஆளுநர்தான் எனவும் கூறியிருந்தது. மேலும், முன்கூட்டி விடுதலை செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பேரறிவாளன் விவகாரம் மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டதா அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், பேரறிவாளன் மட்டுமல்லாமல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரையும் முன் கூட்டி விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களையும் ஆளுநர், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு நளினி தரப்பு வழக்கறிஞர், முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லை என தெரிவித்தார். இதையடுத்து, எந்த தேதியில் ஆளுநர், இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை ஜனாதிபதிக்கு அனுப்பினார் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in