`நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் தர முடியும்'

சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
`நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் தர முடியும்'

நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் தர முடியும் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், நளினிக்கு உயர்நீதிமன்றத்தால் ஜாமீன வழங்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தைத்தான் அணுக முடியும் என்று கூறியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஆளுநர் கிடப்பில் பாேட்டுள்ளார். இதனிடையே, உடல்நிலை பாதிப்படைந்த பேரறிவானுக்கு தமிழக அரசு பரோல் வழங்கியது. தொடர்ந்து அவரது பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தனக்கும் ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவு நகலை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது. இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் தர முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, நளினிக்கு உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்க முடியாது. உச்ச நீதிமன்றத்தைத்தான் அணுக முடியும் என்று கூறினார். மேலும், முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in