தொடங்கியது லாரிகள் வேலை நிறுத்தம்... சரக்கு போக்குவரத்து கடும் பாதிப்பு!

லாரிகள்
லாரிகள்

தமிழ்நாட்டில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மோட்டார் வாகனங்களுக்கான திருத்தப்பட்ட வரி குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது.

காலாண்டு வரி 4900 ரூபாய் ஆக உயர்கிறது. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலும் இருசக்கர வாகனத்திற்கு 375 ரூபாய், இலகு ரக வாகனத்திற்கு 2250 வரை வரி உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே டீசல் விலை உயர்வு,  சுங்கக் கட்டணம் உயர்வு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்த்தப்பட்டிருப்பதால் லாரி உரிமையாளர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.  இந்த வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இன்று மாலை ஆறு மணி வரையில் நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு சிறிய ரக லாரி உரிமையாளர்களும், லாரி சார்ந்த தொழில் செய்பவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் 6.5 லட்சம் கனரக வாகனங்களும், சுமார் 25 லட்சம் சிறிய ரக வாகனங்களும் இன்று இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் லாரிகள் இன்று காலையிலேயே மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் லாரி உரிமையாளர்களுக்கு சுமார் 200 கோடி ரூபாய் வரையில் இழப்பு ஏற்படும் என்றும், சுமார் 5000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு வெங்காயம்,  பூண்டு உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்களின் விலை  ஏற்கெனவே கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் லாரி உரிமையாளர்களின் இந்த வேலை நிறுத்தத்தால்  அத்தியாவசிய பொருள்களின் விலை மேலும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in