`கர்நாடக அரசு ஒரு செங்கலைக்கூட வைக்க முடியாது'

மேகேதாட்டு அணை விவகாரத்தில் எச்சரிக்கும் துரைமுருகன்
`கர்நாடக அரசு ஒரு செங்கலைக்கூட வைக்க முடியாது'

மேகேதாட்டு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,' உச்சநீதிமன்றம் 18.5.2018 அன்று அளித்த ஆணையின்படியும், ஒன்றிய அரசு 1.6.2018 அன்று வெளியிட்ட அதன் அரசிதழிலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது உச்சநீதி மன்றத்தின் ஆணையை செயல்படுத்தத்தான் எனக் கூறியுள்ளது. எனவே, அதற்கு இடையூறு விளைவிக்கும் எந்தப் பணியையும் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக்கூடாது' என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,' தமிழகத்திற்கு எந்தெந்த இடத்திலிருந்து எவ்வளவு நீரைத்தர வேண்டும் என்று உச்சநீதி மன்றம் திட்டவட்டமாக ஆணையிட்டிருக்கிறது. இதைச் செயல்படுத்துவது தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முக்கியப் பங்கு. மேலும், காவிரி நடுவர் மன்ற ஆணையத்தின் இறுதி தீர்ப்பின்படியும், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் படியும், எந்த ஒரு புதிய அணையைக் கட்டுவதற்கும் கர்நாடக அரசிற்கு அனுமதி கிடையாது' என்று அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

'மேகேதாட்டுவில் ஒரு அணைக் கட்டுவது என்பது தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரைத் தடுப்பதற்காகவே என்று கருத வேண்டியுள்ளது' என்று கூறியுள்ள துரைமுருகன், 'இது தமிழக விவசாயிகளின் நலனை பெரிதும் பாதிக்கும். மேலும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பிலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலும் ஒரு மாநிலத்திற்குள் ஓடுகிற நீர் அந்த மாநிலத்திற்கே என்று சொந்தம் கொண்டாட முடியாது, அது தேசிய சொத்து என்று கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிற நீரை இடைமறித்து மேகேதாட்டுவில் அணைக் கட்டுவோம் என்று ஆட்சியில் உள்ளவர்கள் சொல்வது நடுவர் மன்ற தீர்ப்பையும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் செயல்படுவதாகும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த குறிப்பில், தமிழ்நாடு அரசின் இசைவில்லாமல், இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க சாத்தியக்கூறு இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேகேதாட்டு அணைக் கட்டும் பிரச்சினை குறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள போதே, சுற்றுச்சூழல் அனுமதி, வனத்துறையின் அனுமதி, தொழில் நுட்ப அனுமதி, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதல் ஆகிய எதையுமே பெறாமல் கர்நாடக அரசு, தனது 2022-2023-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மேகேதாட்டு அணைகட்டும் திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது' என்று கூறியுள்ள துரைமுருகன், 'இத்திட்டத்திற்காக ரூ.1,000 கோடி அல்ல ரூ.5,000 கோடியை கர்நாடக அரசு ஒதுக்கினாலும், ஒரு செங்கல்லை கூட வைக்க தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்' என்றும் கூறியுள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in