
கோவில்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் மகன், மகளுடன் தாய் என மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தை சேர்ந்தவர், ரிச்சர்ட்ராஜா ( 49). இவர் கோவையில் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி மெர்லின் (44). மகள் ரோஷினி (15), மகன் ரோகித் (13). இவர்கள் அனைவரும் சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து காரில் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவில் ரிச்சர்ட் ராஜா குடும்பத்தினரும், அவருடைய சகோதரர் ஜான்சன் ராஜாவும் (56) காரில் கோவைக்கு புறப்பட்டனர். நள்ளிரவில் அந்த கார் கோவில்பட்டி, சாத்தூர் இடையே நள்ளிசத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் உள்ள பாலத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. அத்துடன் உருண்டு ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் காருக்குள் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர். அத்துடன் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். காரில் இருந்த சிறுவன் ரோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மெர்லின், ரோஷினி, ரிச்சர்ட்ராஜா, ஜான்சன்ராஜா ஆகியோரை ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மெர்லின் பரிதாபமாக இறந்தார். இதனைத்தொடர்ந்து மற்ற மூன்று பேரையும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமி ரோஷினி உயிரிழந்தார். ரிச்சர்ட்ராஜா, ஜான்சன்ராஜா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் ஆகிய 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.