வட மாநிலங்களை தொடர்ந்து சென்னை ஐஐடி வளாகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று, தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்து கொள்ளுமாறு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
உலகத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கரோனா தொற்று ஆட்டி படைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக கரோனா தொற்று கனிசமாக குறைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் முழுமையான தளர்வு அளிக்கப்பட்டு மக்கள் சற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதைத்தொடர்ந்து சென்னை ஐஐடி வளாகத்தில் 30க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று காலை ஐஐடியில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்குமாறு மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவம் மற்றும் செவிலிய படிப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா வார்டுகளை மறுகட்டமைப்பு செய்வதுடன் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் வசதிகள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும். மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு பயிலும் மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.