செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில் முக்கிய உத்தரவு

ஆவணங்களை கொடுக்க மறுத்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து
செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில் முக்கிய உத்தரவு

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் குறியீடு செய்யப்படாத ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு வழங்கக் மறுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 -15-ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி அத்துறையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்ற பிரிவு காவல்துறையினர் 3 வழக்குகளை பதிவு செய்தது. இந்த வழக்குகள் எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையில், பணி வழங்குவதாக சோசடி செய்ததில் சட்டவிரோதமாக பணம் கை மாறியதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள 3 வழக்குகளின் ஆவணங்கள் டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்ட ஆதார ஆவணங்களை வழங்கக் கோரி அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் ஆவணங்களை வழங்க உத்தரவிட கோரி அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் அமர்வு விசாரித்தது. அப்போது, அமலாக்கப் பிரிவு சார்பில் ஆஜராக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணைக்கு சில ஆதார ஆவணங்கள் தேவைப்படுகின்றன. அதை போலீஸ் தரப்பில் கேட்டபோது வழங்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு எதிரான ஒரு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் சிறப்பு நீதிமன்றம் அந்த வழக்கு சம்மந்தமான ஆவணங்களை வழங்க மறுப்பது அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தும். அந்த ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஹசன் முகமது ஜின்னா, போலீஸ் தரப்பில் உள்ள அனைத்து ஆதாரங்களும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு விட்டதாகவும், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை வழங்கவோ, மறுக்கவோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சான்றளிக்கப்பட்ட குறியீடு செய்யப்படாத ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். மேலும், அந்த ஆவணங்களை ஆய்வு செய்து, நகல் வழங்கக் கோரி அமலாக்க பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in