தமிழகத்தின் வளர்ச்சி சமூகத்தின் வளர்ச்சியாக இருக்க வேண்டும்!

திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை
திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்
திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்

"தமிழகத்தின் வளர்ச்சி என்பது, சமூகத்தின் வளர்ச்சியாக, வாழ்க்கை வளர்ச்சியாக, சிந்தனை வளர்ச்சியாக, பண்பாட்டு வளர்ச்சியாக இருக்க வேண்டும்" என்று மாநிலத் திட்டக்குழு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மாநிலத் திட்டக்குழு ஆய்வுக் கூட்டம் முதலமைச்சரும், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை எழிலகத்தில் உள்ள மாநிலத் திட்டக்குழு அலுவலகத்தில் துறை சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவைச் சார்ந்த நீங்கள் அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளைச் சொல்கிறீர்கள். உங்களிடம் இருந்து வரும் எண்ணங்கள், ஆலோசனைகளாக மட்டுமில்லாமல், அந்த எண்ணம் குறித்த முழுமையான செயல்வடிவமாக எங்களுக்கு கிடைக்க வேண்டும். புதிய புதிய எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றலாம். அந்த எண்ணம் குறித்து அது பற்றிய வல்லுநர் குழுவுடன் நீங்களே ஆலோசனை நடத்தலாம். குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு நீங்களே போய் பார்க்கலாம். அதன் நீள அகலங்கள் அனைத்தையும் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

அதன் பிறகு அவற்றை மேம்படுத்த அதனை அரசுக்கு உங்களது திட்ட அறிக்கையாக நீங்கள் வழங்கலாம். அதாவது ஒரு ஆலோசனையை நீங்கள் சொல்லும் போது அதன் ஏ டூ இசட் அனைத்தையும் நீங்களே அலசி ஆராய்ந்து எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கு துறை வாரியான வல்லுநர்களை நீங்கள் சந்திக்கலாம். கலந்துரையாடல் நடத்தலாம். வெளிமாவட்டங்களுக்குச் சென்று நீங்களே விவசாயிகளை, தொழிலதிபர்களை, இளைஞர்களை சந்திக்கலாம். அவர்களது ஆலோசனையையும் பெறலாம். இவ்வாறான செயல்முறைத் திட்டங்களோடு நீங்கள் பணியாற்ற வேண்டும். மிக முக்கியமான ஆலோசனையாக இருந்தால் அது குறித்த முழுமையான பரிசீலனைக்குப் பிறகு நீங்கள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். தமிழகம் பல்வேறு வகைகளில் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது.

 முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அது நமக்கு பெருமை தருவதாகும். வளர்ச்சித் திட்டங்களையும் சமூக சீர்திருத்தத்தையும் இணைத்ததால் நம் மாநிலம் அடைந்த மாபெரும் பலன் அது. அதே நேரத்தில் முழுமையாக முன்னேற்றம் அடைந்துவிட்டோமா என்றால் இல்லை. அத்தகைய முழுமையான முன்னேற்றத்தை அடையத் தேவையானவை குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். மனிதவள மேம்பாடு, வாழ்க்கைத் தரம், மனித வாழ்க்கையின் ஆயுள், கல்வி கற்றல், குழந்தைகள் வளர்ப்பு, வறுமை ஒழிப்பு, மக்கள் நலவாழ்வு, மனித உரிமைகள், சமூகநீதி, விளிம்பு நிலை மக்கள், இப்படி அனைத்து தரப்புகளிலும் நாம் மேம்பட்டவர்களாக மாற வேண்டும்.

இத்தகைய குறியீடுகளை தமிழகத்தில் மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முனைப்போடு இருக்கிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து நீங்கள் அரசுக்கு வழங்க வேண்டும்.சமச்சீரான வளர்ச்சியை, அனைத்து மாவட்டங்களும் ஒரே மாதிரியான வளர்ச்சியை, நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். அத்தகைய சமச்சீரான வளர்ச்சி நம்மிடம் இதுவரை இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். தொழில் வளர்ச்சியில் மாவட்டத்துக்கு மாவட்டம் வேற்றுமை உள்ளது. அதேபோல் கல்வியிலும் மாறுபாடு இருக்கிறது. சில மாவட்டத்தில் வறுமை குறைவாகவும், சில மாவட்டங்களில் அதிகமாக இருப்பதை நாம் காண்கிறோம். இந்த வேறுபாட்டையும் மாறுபாட்டையும் களைய தமிழகம் முழுமைக்குமான சமச்சீரான ஒரு வேலைத் திட்டம் தேவை. இவை நாளையே நடந்து விடும் என்று நினைக்கும் கற்பனைவாதி அல்ல நான். ஆனால் சமச்சீரான வளர்ச்சிக்கான பயணத்தை நாம் உடனடியாக தொடங்கியாக வேண்டும் என்ற இலட்சியவாதியாக நான் என்னை உருவாக்கிக் கொள்ள நினைக்கிறேன். எத்தனையோ நல்ல பல திட்டங்களை வகுக்கிறோம்.

அதுதான் தமிழகத்துக்கு முதலாவது, பல மாநிலங்களுக்கு முதலாவது, இந்தியாவுக்கு முதலாவது, ஒன்றிய அரசே இதனை பின்பற்றுகிறது என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அத்தகைய திட்டமானது, அடித்தட்டு மக்களைச் சென்றடைந்து விட்டதா? என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உரிய பலனைக் கொடுத்துள்ளதா என்பதை கள ஆய்வு மூலமாக நீங்கள் கண்காணித்து எங்களுக்குச் சொல்ல வேண்டும். நல்ல திட்டமானது போய்ச் சேரவில்லை என்றால் அதனால் எந்த பயனும் இல்லை. அதனை கண்காணிப்பவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

திட்டங்களை உருவாக்குவதற்கும் - அதனை நடைமுறைப்படுத்துவதற்குமான கால இடைவெளியைக் குறைக்க வேண்டும். தமிழகத்தின் நிதி நெருக்கடியை நான் சொல்லத் தேவையில்லை. அநாவசியச் செலவுகளைக் குறைப்பது குறித்த ஆலோசனைகள் தேவை. நிதி திரட்டுதல் என்பது முக்கியமாக வரிவசூல் - பத்திரப்பதிவு - ஆயத்தீர்வை ஆகியவற்றின் மூலம் மட்டுமே வருகிறது. அதனைத் தாண்டி சுற்றுலா, சிறுகுறு தொழில்கள், கைவினைப் பொருள்கள், கைத்தறி போன்ற துறைகளின் மூலமாகவும் வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். தொழில் உருவாக்கம் என்பது நிதி உருவாக்கமாகவும், வேலைவாய்ப்பு பெருக்கமாகவும் மாற வேண்டும். கிராமப்புற மேம்பாடு குறித்து அக்கறையோடு நீங்கள் சிந்திக்க வேண்டும். இப்படி எத்தனையோ வகைகளை நீங்கள் சிந்தித்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். தமிழகத்தின் வளர்ச்சி என்பது, சமூகத்தின் வளர்ச்சியாக, வாழ்க்கை வளர்ச்சியாக, சிந்தனை வளர்ச்சியாக, பண்பாட்டு வளர்ச்சியாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி. அத்தகைய வளர்ச்சிக்கு பெயர் சூட்ட வேண்டுமானால் அதுதான் 'திராவிட மாடல்' .பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி. அதற்கு உங்களது வழிகாட்டுதல்கள் தேவை" என்று கேட்டுக் கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in