ஓணம் பண்டிகை: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை!

ஓணம் பண்டிகை: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை!

மலையாளிகளின் மிக முக்கிய பண்டிகையான ஓணப் பண்டிகை வரும் 8 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு அன்றைய நாளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் மிக முக்கியப் பண்டிகைகளில் ஒன்று ஓணம். கேரளத்தை ஆண்ட மாவலி மன்னர் ஆண்டுக்கு ஒருமுறை தன் மக்களை பார்க்க வருவதாக ஜதீகம். அந்நாளே ஓணத்திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை நாளன்று ஓண விருந்து எனப்படும் அனைத்துவகை காய்கறிகளையும் கொண்ட விருந்தும் படைக்கப்படும். ஓணத்தை முன்னிட்டு தமிழகத்தின் தோவாளை, மதுரை உள்பட பல்வேறு சந்தைகளில் இருந்தும் டன் கணக்கிலான பூக்கள் கேரளம் சென்று கொண்டிருக்கின்றன. இதனால் பூக்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. ஓணத்தை முன்னிட்டு அத்தப்பூ கோலமிட்டு அலங்கரிக்கும் வழக்கம் இருப்பதாலும், அதற்கு பூக்களே பிரதானம் என்பதாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இருக்கும் மலையாளிகள் ஓணத்தைக் கொண்டாடும் வகையில் வரும் 8 ம் தேதி கன்னியாகுமரி, சென்னை, திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வரும் 8 ம் தேதி சபரிமலையில் ஓணம் மண்டிகை சிறப்பு பூஜை நடக்கிறது. அதற்கான தரிசன முன்பதிவு இணையவழியில் நடந்துவருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in