பரபரப்பான சூழலில் ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

2024-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை( பிப்.12) தொடங்க உள்ளது. முதல் நாளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அந்த வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது. கடந்த ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார்.

இதனால், ஆளுநர் இருக்கும் போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே, பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் தெரிவித்த கருத்துகளால், தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நிலவிய பனிப்போர் மேலும் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தையும் ஆளுநர் முடித்து வைக்காமல் இருந்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவை

இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் நாளை (பிப்.12) தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து பிப்.19-ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.

இதையடுத்து பிப்.20-ம் தேதி முன்பண மானியக் கோரிக்கையும், பிப்.21-ம் தேதி முன்பணச் செலவின மானியக் கோரிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்புவதற்காக வைக்கப்பட்டுள்ள திரையின் அகலம் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in