
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனது அதிரடி நடவடிக்கைகள் மாவட்ட மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவர்களை வீடு தேடிச் சென்று தனது வாகனத்திலேயே அழைத்து வந்து பள்ளியில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் இருந்து இடை நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுத் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்ட மாவட்ட ஆட்சியர், இடை நின்ற மாணவர்கள் அவர்களின் முகவரி சேகரித்துள்ளார்.
இதில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாசரியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் 31 பேர் பல்வேறு காரணங்களுக்காகப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருப்பதை அதிகாரிகளின் மூலம் அறிந்த ஆட்சியர் நேரடியாக அவர்களின் இல்லத்திற்கு சென்று மாணவர்களின் பெற்றோரிடம் பேசியுள்ளார். பின்னர் தனது வாகனத்திலேயே அவர்களை அழைத்து வந்து அறிவுரை வழங்கி மாணவர்களை வகுப்பிற்கு அனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளிகளில் ஆட்சியர் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’மாவட்டம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தல் காரணமாக வீட்டிலேயே இருந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் மாவட்ட கல்வி நிர்வாகத்தின் சார்பாக நேரடியாக அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களுடைய குறைகளைக் கேட்டு அறிந்து அதை நிவர்த்தி செய்துள்ளோம். மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று படிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் மாவட்ட மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.