
பங்காரு அடிகளார் மறைவுக்கு பிறகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை யார் கவனித்துக் கொள்வது என்பதில் அடிகளாரின் இரண்டு மகன்களுக்கு இடையே பிரச்சினை நிலவி வந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது இளைய மகன் செந்தில்குமார் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.
ஒரு முறை தனது தந்தை பங்காரு அடிகளார் பிறந்தநாளின்போது தன்னை அழைத்து கையை உயர்த்தி பிடித்து நின்று புகைப்படம் எடுக்கச் சொன்னதாகவும் என்னப்பா இது எனக் கேட்டபோது சும்மா தான் என்று அவர் கூறியதாகவும் நினைவுகூர்ந்த செந்தில்குமார், நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும், உடல்நலத்தை கவனமாக பார்த்துக்கொள் என்று தனது தந்தை அக்கறையோடு தன்னிடம் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
தங்களுக்கு என்னென்ன சொத்துக்கள் உள்ளன என்பதை யார் வேண்டுமானாலும் பத்திரப்பதிவு துறை மூலம் தெரிந்துகொள்ளலாம். பாத பூஜைக்கு ரூ.1500 வாங்கிய எனது தந்தை, அந்தத் தொகை முழுவதையும் மருத்துவமனை நிர்வாக செலவுகளுக்கு அனுப்பி விடுவார். கோயில் காசிலிருந்தோ, பக்தர்கள் காணிக்கையில் இருந்தோ எங்களுக்கு 1 ரூபாய் கூட பங்காரு அடிகளார் கொடுத்ததில்லை.
எனது அண்ணனுடன் தனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை. இப்போதும் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். வீட்டிற்கு மூத்தவர் தனது அண்ணன் அன்பழகன் என்பதால் அவருடன் கலந்து ஆலோசித்தே எல்லா முடிவுகளையும் எடுக்கிறோம். குடும்பத்துக்காக பங்காரு அடிகளார் எதுவும் செய்யவில்லை. எங்களை படிக்க மட்டுமே வைத்தார் என செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.