``ரேஷன் கடைகளில் இனி பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும்" என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகள் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள், கேழ்வரகு வழங்கப்படும். நீலகிரி, தருமபுரியில் வசிக்கும் பழங்குடியின, மலைவாழ் மக்களின் பிரதான உணவாகும் கேழ்வரகு. நீலகிரி, தருமபுரியில் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகைநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிக அளவில் உள்ளனர். அரசிக்கு பதில் கேழ்வரகு தந்தால் ஊட்டச்சத்து உணவு கிடைப்பதுடன் மக்களின் உணவு பழக்க வழக்கங்களும் மாறுபடும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் ரூ.50 கோடி மதிப்பீட்டில் முழுமையாக கணினி மயமாக்கப்படும். மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்கள், எடையாளர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும். சமீபத்தில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் தரமில்லை என புகார் வந்ததை அடுத்து, இனி குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி விநியோகிக்கப்படும்'' என்று கூறினார்.