
உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடல், அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததை தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் 27 மடங்கு அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே உடல் உறுப்பு தானத்தில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டில், தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல் உறுப்பு தான விருப்ப பதிவுகளை மேற்கொண்டு வந்தனர். உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டு, தனது குடும்பத்தைச் சேர்ந்த அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன், மனைவி ஆகிய 8 உறவுகளுக்கு இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று மற்றும் கல்லீரலில் ஒரு பகுதியாக தானமாக வழங்க முடியும்.
அதேபோல் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், எலும்பு, தோல் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக பெறலாம். இதன் மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறு வாழ்வு அளிக்க முடியும்.
இதனிடையே உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில், அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பிற்கு பின்னர், உடல் உறுப்பு தான விருப்ப பதிவுகள் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணைய செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த 5 வாரங்களில், உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை 2,700 ஐ தாண்டியுள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் இது 27 மடங்காக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.