திமுக எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதி... போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

மீனவர்கள் போராட்டம்
மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் இன்று வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்குச் மீன் பிடிக்கக் கிளம்பியுள்ளனர்.

மீனவர்கள் போராட்டம்
மீனவர்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தது. இதில் பலரை நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் ராபர்ட், ஜான் பிரிட்டோ, சாம்சன், நெல்சன், நம்பு முருகன் ஆகிய 5 மீனவர்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 5 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் எதிரே நேற்று  முன் தினம் முதல் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம் தொடங்கினர். ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் என ஏராளமானோர் திரண்டு  உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மீனவர்களை மீட்பது மட்டுமின்றி, கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை கடற்படை வசமுள்ள தமிழகத்தை சேர்ந்த 151 விசைப்படகுகளை மீட்டுத் தரவும், மீட்க முடியாமல் முற்றிலும் சேதமடைந்த படகுகளுக்கு தலா ரூ.30 லட்சம் வீதம் இழப்பீடாக மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 10 விசைப்படகுகளை மீட்புக்குழு சென்று மீட்டு வர அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்பதை  வலியுறுத்தி  இரண்டாவது நாளாகவும்  நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நீடித்தது.

இந்தநிலையில், திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களை நேரில் வந்து சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று  எம்எல்ஏ உறுதி அளித்தார். இந்த உறுதியை ஏற்று மீனவர்கள் தங்கள் போராட்டத்தை நேற்று மாலை வாபஸ் பெற்றனர்.

மீனவர்கள் பேரணி
மீனவர்கள் பேரணி

அதையடுத்து இன்று காலை ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்கு சென்றனர். மீண்டும் இந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியும், கைது செய்து செல்லாமல் இருக்கவும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in