தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வீடுகளில் இரவு நேரங்களில் மின் விசிறி, ஏசி இல்லாமல் தூக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், மின் தேவையும் அதிகரித்து வருகிறது. போதாக்குறைக்கு நிலக்கரி தட்டுப்பாட்டால் பல அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட பல அனல் மின் நிலைங்களில் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையை தவிர்க்க தனியார் நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி வருவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று 28/04/22 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 387.047 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெகாவாட் அளவில் 17,370 MW. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு மார்ச் 2022 இறுதியில், 378.328மி.யூ / 17,196 MW" என்று தெரிவித்துள்ளார்.