
தீபாவளி பண்டிகையை ஒட்டி இறைச்சி கடைகளில் அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சி வகைகளை வாங்கி சென்று வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள் அணிந்து, அதிகாலையிலேயே பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இறைச்சி கடைகளில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே இறைச்சிக் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சி வகைகளை பொதுமக்கள் வாங்கிச் சென்று வருகின்றனர்.
ஆடு, கோழி, மீன் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். கோவையில் ஒரு கிலோ சிக்கன் 250 ரூபாய்க்கும், மட்டன் ஒரு கிலோ 850 ரூபாய் வரையிலும், நாட்டுக்கோழி கிலோ 800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகளவில் இறைச்சி கடைகளில் கூடுவதால் வரிசையில் நிற்குமாறு இறைச்சிக் கடைக்காரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இது மட்டுமின்றி, மீன் கடைகளிலும் ஏராளமானோர் அதிகாலையிலேயே குவிந்துள்ளனர். சங்கரா, சீலா, மத்தி, வஞ்சிரம், கிழங்கான், கிளிமூக்கு, வாவல் உள்ளிட்ட வகை கடல்மீன்களும், நெய்மீன், கட்லா, ரோகு, ஜிலேபி உள்ளிட்ட டேம் மீன்களும் கடைகளில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் இறால், நண்டு உள்ளிட்டவை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.