`டீனை பொறுப்பாக்கக்கூடாது'- மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு ப.சிதம்பரம் திடீர் ஆதரவு

`டீனை பொறுப்பாக்கக்கூடாது'- மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு ப.சிதம்பரம் திடீர் ஆதரவு

மருத்துவக் கல்லூரி டீன் அவர்களுக்குத் தெரிவிக்காமல் மாணவர் தலைவர் இந்தத் தவறைச் செய்திருக்கிறார் என்று பல டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள் என்றும் அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக்கூடாது என்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது வழக்கம் போல், முதலாமாண்டு மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பொதுவாக ‘ஹிப்போக்ரடிக் ஓத்’ எனப்படும் உறுதிமொழி எடுப்பது வழக்கம். ஆனால், ‘மகரிஷி சரக் சபத்’ என்ற சம்ஸ்கிருத உறுதிமொழியின் ஆங்கில மொழிபெயர்ப்பை மாணவர்கள் உறுதிமொழியாக எடுத்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த மருத்துவமனை முதல்வர் ரத்தனவேலு, அரசு வெப்சைட்டில் இருந்ததால், இதை சரி என நினைத்து மாணவர் தலைவர் வாசித்துவிட்டார். பேராசிரியர்களிடமோ, என்னிடமோ அவர் அனுமதி கேட்கவில்லை. அப்படி கேட்டிருந்தால், இது தடுக்கப்பட்டிருக்கும்’’ என்றார்.

"அரசு மதுரை மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற புதிதாக சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஹிப்போகிரேடிக் உறுதிமொழி பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல்" என்று தெரிவித்திருந்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரை மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேல் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார். உறுதிமொழியை மாணவர்களிடம் எடுக்க வைத்ததிற்கு துறை ரீதியாக விசாரணை நடத்த மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதடையே, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "``மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது, வருத்தம் அளித்தது. மருத்துவக் கல்லூரி டீன் அவர்களுக்குத் தெரிவிக்காமல் மாணவர் தலைவர் இந்தத் தவறைச் செய்திருக்கிறார் என்று பல டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். டீன் டாக்டர் ரத்தனவேலு அவர்கள் கரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவமனையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம். அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக்கூடாது. ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in