இன்று முதல் 5 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை!

குற்றாலம் வெள்ளப் பெருக்கு
குற்றாலம் வெள்ளப் பெருக்கு
Updated on
2 min read

தென்காசி மாவட்டத்திற்கு இன்று மே 18ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு அபாயம் இருப்பதால் குற்றாலத்தில் உள்ள அருவிகள், அணைகள், சுற்றுலா பகுதிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை இன்று பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் அருவி
குற்றாலம் அருவி

குறிப்பாக தென்காசியில் இன்று முதல் (மே 18) வரும் 21-ம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்பதால் குற்றாலத்திலுள்ள பிரதான அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி மற்றும் இதர அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த அருவிகள், அணைப் பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொது மக்கள் குளிக்க தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது.

அத்துடன், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் ஆறு மற்றும் குளங்களில் நீர்வரத்து அதிகமாக வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உரிய எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருந்திட அறிவுறுத்தப்படுகிறது.

தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர்.
தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர்.

மேலும் ஆழமும், நீரோட்டமும் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதால் விவசாய தொழிலாளர்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள், இடி மின்னலின் போது வெட்ட வெளியில் நடக்க வேண்டாம் என்றும், மரங்களுக்கு கீழ் பாதுகாப்பிற்காக ஒதுங்க வேண்டாம் என்றும், பெருமழையின் போது காய்ச்சிய குடிநீரினையே பருகி நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 அல்லது 04633-290548 என்ற எண்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ள நெல்லைக்கு தமிழ்நாடு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 90 பேர் சென்னையில் இருந்து விரைந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in