
தமிழக பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதை தடுக்கும் வகையில், பதிவுக்கு வரும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்த புகைப்படங்களை ஆவணமாக இணைக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாக தமிழக பதிவுத்றை தெரிவித்துள்ளது.
தமிழக பதிவுத்துறையில் போலி ஆவணங்கள் பதியப்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, பத்திரப்பதிவின்போது, காலியிடம் அல்லது கட்டிடம் ஆகியவற்றுக்கான பதிவுக்கட்டணம் வேறுபாடு ஏற்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது கட்டிடத்தை விட காலியிடத்திற்கு பதிவுக்கட்டணம் குறைவு. இதனால், பலரும் பதிவு கட்டணத்தில் சலுகை பெறும் நோக்கில், கட்டிடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதிந்து வந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதை தவிர்க்கும் நோக்கில், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படங்களை கண்டிப்பாக ஆவணமாக இணைத்தல் வேண்டும். இந்த நடைமுறை அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி கூறியிருந்தார். ஆனால் அக்டோபர் 1ம் தேதி ஞாயிறு விடுமுறையாகும். இன்று அக்டோபர் 2ம் காந்தி ஜெயந்தி நாளாகவும் இருந்ததால், அக்டோபர் 3ம் தேதியான நாளை முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
இதன்படி நாளை முதல் பத்திரப்பதிவு செய்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய போகும் சொத்து ஆவணங்களுடன் சொத்துக்கள் குறித்த புகைப்படம் மற்றும் ஜியோ கோ-ஆடினேட்ஸ் உடன் எடுக்கப்பட்டு இணைப்பது கட்டாயமாகிறது. மேலும், அதிகாரிகள் கட்டிடங்களை, காலியிடமாக பதிவு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...