`தமிழகத்தில் பரவும் புதிய வகை கரோனா'‍- அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஒமிக்ரான் பிஏ-4 வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குணமடைந்த நிலையில் யாருக்கும் அந்த வைரஸ் பரவக் கூடிய நிலையில் இல்லை என்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “செங்கல்பட்டு மாவட்டம், நாவலூரில் ஒமிக்ரான் பிஏ-4 வகை தொற்று ஒருவருக்குப் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்காக 800 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு நோயாளி கூட சிகிச்சை பெறவில்லை. இந்த நிலையில் யாருக்காவது ஒருவருக்கு அல்லது அவர்களை சார்ந்தவர்களுக்கோ கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அதை மரபியல் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்கிறோம். அது போன்று ஆய்வு செய்ததில் ஒருவருக்கு கரோனா பிஏ-4 வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவல் தெரிந்ததும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்டவரைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் முழுமையாகக் குணமடைந்து விட்டார்கள். அவர்கள் தொடர்பிலிருந்தவர்களையும் கண்டறிந்து பரிசோதனை நடத்தி இருக்கிறோம். அதிலும் யாருக்கும் கரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐம்பதுக்கும் குறைவான அளவில்தான் கரோனா பாதிப்படைந்தவர்கள் உள்ளனர்“ எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in