நீட் தேர்வு: என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

கேள்விக்குறியில் தமிழக மாணவர்களின் எதிர்காலம்?
நீட் தேர்வு: என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்தாண்டாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்" என்று திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி இது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு கோரி சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா உடனடியாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த ஆளுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், 142 நாட்களுக்கு பிறகு நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பினர். இது தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு மாதம் நெருங்கி வரும் நிலையில், அமைச்சர்களுடன் ஆளுநரை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்ததாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரைக்கும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனிடையே, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது மாணவர்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டும் மருத்துவ கனவை எதிர்நோக்கியுள்ள தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுதும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமரை சந்திக்கும்போது நீட் விலக்கு கேட்டு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கடந்த காலங்களில் நீட் விலக்கு கோரி பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழக முதல்வர்கள், எம்பிக்கள் நேரில் வலியுறுத்தி வந்தன. ஆனால், எதையும் காது கொடுத்து கேட்கும் மனநிலையில் மத்திய அரசு இல்லை என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு வரும் 2-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது என தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 16.4 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in