சாலை அமைக்கும் பணிக்காக புதுச்சேரியில் இரவோடு இரவாக எம்.ஜி.ஆர் சிலை அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி - விழுப்புரம் பைபாஸ் சாலை அருகே வில்லியனூர் மூன்று முனை சந்திப்பின் நடுவில் எம்.ஜி.ஆர் சிலை ஒன்று இருந்தது. புதுச்சேரி - விழுப்புரம் சாலை விரிவாக்கம் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
எனவே சிலையை அப்புறப்படுத்தும் முயற்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலை அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அதிமுகவினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து சிலையை வேறு இடத்தில் வைப்பதற்கான இடம் குறித்து கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென எம்.ஜி.ஆர் சிலை அகற்றப்பட்டது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி தொண்டர்கள் சிலையை மீண்டும் நிறுவக் கோரினர்.
காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அன்பழகன், உடனடியாக சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையடுத்து காவல்துறையினர், எம்.ஜி.ஆர் சிலையை கிரேன் உதவியுடன் கொண்டு வந்து முதலமைச்சர் கூறிய இடத்தில் வைத்தனர்.
இதனையடுத்து அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். எம்.ஜி.ஆர் சிலை அகற்றப்பட்டதை தொடர்ந்து அதிமுகவினர் குவிந்ததால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.