சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தை பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் முழுமையாகச் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. 60 ஆயிரத்து 180 கோடி செலவில் 118. 9 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்ட திட்டமானது மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நான்காவது வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 26 கி.மீ நீளத்திற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாவது கட்ட திட்டத்தை மேலும் 93 கி.மீ தூரத்திற்கு நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி 4-வது வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை உள்ள பாதையைப் புதிதாக அமையவிருக்கும் பரந்தூர் விமான நிலையம் வரை 50 கி.மீ தூரத்திற்கு நீட்டிக்கப்பட உள்ளது. அந்தப் பணிக்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க விரைவில் ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.